மொஹாலி: கொல்கத்தா அணி வெற்றிபெறுவதற்கு 192 ரன்களை பஞ்சாப் அணி இலக்கால நிர்ணயித்துள்ளது. பஞ்சாப் அணி தரப்பில் அதிகபட்சமாக பனுகா ராஜபக்ஷா 50 ரன்கள் சேர்த்தார்.
16வது ஐபிஎல் சீசனின் 2வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் நிதீஷ் ராணா, பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து பஞ்சாப் அணி சார்பாக ஷிகர் தவான் - பிரப்சிம்ரன் சிங் இனை தொடக்கம் கொடுத்தது. தொடக்கத்திலேயே அதிரடி காட்டிய பிரப்சிம்ரன் சிங் 12 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதன் பின்னர் ஜோடி சேர்ந்த பனுகா ராஜபக்சே - தவான் இணை கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர்களை பதம் பார்த்தது. குறிப்பாக சுனில் நரைன் வீசிய இரு ஓவர்களில் பனுகா ராஜபக்சே 24 ரன்கள் விளாசி அதிரடி காட்டினார். இவரை கட்டுப்படுத்த முடியாமல் கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் திணறினர். ஷர்துல் தாகூர் வீசிய ஒரு ஓவரில் இரு பவுண்டர், ஒரு சிக்சர் விளாச, பஞ்சாப் அணியின் ஸ்கோர் வேக வேகமாக உயர்ந்தது.
தொடர்ந்து சிறப்பாக ஆடிய பனுகா ராஜபக்சே 29 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார். அதன் பின்னர் 50 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த ஜித்தேஷ் சர்மா 21 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வருண் சக்கரவர்த்தி வீசிய பந்தில் 40 ரன்கள் எடுத்து ஷிகர் தவானும் பெவிலியனுக்கு நடையை காட்டினார். இருப்பினும் பஞ்சாப் அணியின் ரன் ரேட் குறையாமல் இருந்தது. ஒவ்வொரு ஓவருக்கும் ஒரு பவுண்டரியை பஞ்சாப் பேட்ஸ்மேன்கள் விளாசினர்.

பின்னர் சிக்கந்தர் ராசா - சாம் கரண் கூட்டணி வேகமாக ரன்கள் எடுத்தது. இதனிடையே சுனில் நரைன் 18வது ஓவரை வீச அழைக்கப்பட்டார். அதில் சிக்ஸ் அடிக்க முயன்று சிக்கந்தர் ராசா 16 ரன்களில் ஆட்டமிழக்க, கடைசி நேர பரபரப்பு ஆட்டத்தில் ஏற்பட்டது. ஷர்துல் தாகூர் வீசிய 19வது ஓவரில் 8 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டது. கடைசி ஓவரை வீச டிம் சவுதி அழைக்கப்பட்டார்.
அதனை பஞ்சாப் பேட்ஸ்மேன் ஷாரூக் கான் எதிர்கொண்டார். முதல் பந்திலேயே பவுண்டரி அடிக்கப்பட, பெரிய ஓவராக பஞ்சாப் அணிக்கு மாறுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. பின்னர் ரூ.18.5 கோடி வாங்கிய சாம் கரண் தன் பங்கிற்கு 3வது பந்தில் சிக்சரை அடிக்க, பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 191 ரன்கள் எடுத்தது. கடைசி நேரத்தில் சாம் கரண் அதிரடியாக 17 பந்துகளில் 26 ரன்கள் சேர்த்தார்.