மொஹாலி : ஐபிஎல் தொடரில் இதுவரை சாம்பியன் பட்டம் வெல்லாத அணிகளில் பஞ்சாப் அணியும் ஒன்று. அணியின் ஜெர்சி, கேப்டன், பயிற்சியாளர் , அணியின் பெயர் என அனைத்தையும் மாற்றியும் பஞ்சாப் அணி இதுவரை கோப்பையை கைப்பற்றவில்லை. இந்த நிலையில் நடப்பு ஐபிஎல் சீசனில் பஞ்சாப் அணி ஷாம் கரணை ஏலத்தில் எடுத்திருக்கிறது.
இதனால் அந்த அணியின் பலம் கூடியிருப்பதாக கருதப்பட்டது. எனினும் பஞ்சாப் அணியின் முக்கிய வீரரான ஜானி பாரிஸ்டோ, நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த அணிக்கு பெறும் பின்னடைவை தந்துள்ளது. தற்போது அந்த அணியின் முக்கிய வீரரான லியம் லிவிங்ஸ்டோன் காயம் காரணமாக நடப்பு சீசனில் பங்கேற்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

கடந்த ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் விளையாடிய லிவிங்ஸ்டோன் 437 ரன்கள் அடித்திருந்தார். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 182 என்று அளவில் இருந்தது. இந்நிலையில் லிவிங்ஸ்டோன் கடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது காயம் அடைந்தார். அதன் பிறகு அவர் எவ்வித கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்கவில்லை.
தற்போது தனது உடல் தகுதியை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் லிவிங்ஸ்டோன் இருக்கிறார். எனினும் ஐபிஎல் தொடரில் முதல் ஆட்டத்தில் அவர் விளையாடுவார் என பஞ்சாப் ரசிகர்கள் நம்பிக்கையாக இருந்தனர். ஆனால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் லிவிங்ஸ்டோன் முதல் போட்டிகளில் விளையாட அனுமதி வழங்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், அவர் இந்தியாவுக்கே வந்து சேரவில்லை.

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் பஞ்சாப் அணி கலக்கத்தில் இருக்கிறது. பஞ்சாப் அணி தனது முதல் ஆட்டத்தில் மொகாலியில் வரும் ஒன்றாம் தேதி கொல்கத்தா அணியை எதிர்கொள்கிறது. அதன்பிறகு இரண்டாவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் பஞ்சாப் அணி மோதுகிறது. அதற்குள் லிவிங்ஸ்டோன் இந்தியா வந்து விடுவாரா என்பது குழப்பமாக உள்ளது.
இதேபோன்று முதல் ஆட்டத்தில் ரபாடாவும் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரபாடா வரும் 3ஆம் தேதி தான் இந்தியாவுக்கு வர உள்ளார். இது பஞ்சாப் அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.