மொஹாலி: ஐபிஎல் தொடரின் 2வது போட்டியில் பேட்டிங் பலம் கொண்ட பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து பவுலிங் பலம் கொண்ட கொல்கத்தா அணி விளையாடுகிறது.
16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நேற்று பிரம்மாண்டமாக தொடங்கியது. இன்றைய நாளில் ஐபிஎல் தொடரில் 2 போட்டிகள் நடக்கிறது. முதல் போட்டியில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து நிதீஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடுகிறது.

கடந்த ஐபிஎல் தொடரில் வழக்கம் போல் 6வது இடத்தை பிடித்த பஞ்சாப் அணி, மீண்டும் கேப்டன் மற்றும் பயிற்சியாளர்களை கழற்றிவிட்டுள்ளது. மயங்க் அகர்வாலை கழற்றிவிட்டு ஷிகர் தவானை கேப்டனாகவும், அனில் கும்ப்ளேவை கழற்றிவிட்டு ட்ரிவோர் பேலிஸையும் பயிற்சியாளராக நியமித்துள்ளது.
அதேபோல் மெகா ஏலத்தில் அத்தனை வீரர்களையும் கழற்றிவிடாமல் சில வீரர்களை மட்டுமே விடுவித்து ஆச்சரியம் கொடுத்தது. அதேபோல் ஆல்ரவுண்டர் சாம் கரணுக்காக ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகையான ரூ.18.5 கோடி கொடுத்து ஏலத்தில் வாங்கியது. இதனால் பஞ்சாப் அணியின் ஆல்ரவுண்டர்களின் தரம் மேலும் உயர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஜிம்பாப்வே அணியின் சிக்கந்தர் ராசாவையும் வாங்கியது சிறந்த யுக்தியாக உள்ளது.
ஆனால் கொல்கத்தா அணிக்கு எதிரான முதல் போட்டியில் அதிரடி வீரரும், சுழற்பந்துவீச்சாளருமான லியம் லிவிங்ஸ்டன் ஆடாதது பஞ்சாப் அணிக்கு பின்னடைவாக உள்ளது. அதேபோல் தேசிய அணிக்காக விளையாடி வரும் முக்கிய பந்துவீச்சாளாரான ககிசோ ரபாடாவும் அணியில் இல்லை. இதனால் அர்ஷ்தீப் சிங், சாம் கரண், ராகுல் சஹர் ஆகியோரையே அதிகம் நம்பியுள்ளது. அதேபோல் பேர்ஸ்டோவும் காயத்தால் விலகியுள்ளதால், ஷிகர் தவான் மீதான அழுத்தம் அதிகமாகியுள்ளது.
மறுபக்கம் கொல்கத்தா அணியிலும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக விலகியதால், ஆச்சிடண்டல் கேப்டனாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார் நிதீஷ் ராணா. அதேபோல் கொல்கத்தா அணியின் முக்கிய வீரராக கருதப்பட்ட லிட்டன் தாஸ் மற்றும் ஷகிப் அல் ஹசன் ஆகியோர் முதல் சில போட்டிகளில் விளையாட மாட்டார்கள். இதனால் பேட்டிங் பணி வெங்கடேஷ் ஐயர், குர்பாஸ், ஜெகதீசன், ராணா மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் மீது விழுந்துள்ளது. ஆனால் கொல்கத்தா அணியின் பவுலிங் எல்லா அணிகளுக்கு சவால் அளிக்கும் வகையில் உள்ளது.

சுனில் நரைன், ரஸல், ஷர்துல் தாகூர், உமேஷ் யாதவ், டிம் சவுதி, ஃபெர்குசன், வருண் சக்கரவர்த்தி என்று பெரும் படையையே வைத்துள்ளது. இதனால் பஞ்சாப் அணியின் பேட்டிங் பலத்திற்கும் கொல்கத்தா அணியின் பந்துவீச்சுக்கும் இடையிலான போட்டியாக இந்த ஆட்டம் அமையும். அதேபோல் மொஹாலியில் நடப்பதால் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தாலும், நேற்று மழை பெய்துள்ளது.
இதனால் பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்றும், சேஸிங் செய்யும் அணி வெற்றிபெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது. இவ்விரு அணிகள் இதுவரை 30 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 10-ல் பஞ்சாப்பும், 20-ல் கொல்கத்தாவும் வெற்றி பெற்றுள்ளன. ஆனால் இம்முறை பஞ்சாப் அணியின் பேட்டிங் பலம் கொல்கத்தா அணிக்கு சவால் அளிக்கும் என்று பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டி மாலை 3.30 மணிக்கு தொடங்க உள்ளது.