தரம்சாலா: வாழ்வா, சாவா போட்டியில் டெல்லி அணியை எதிர்த்து பஞ்சாப் அணி களமிறங்க உள்ளது. பஞ்சாப் அணி விளையாட உள்ள 2 போட்டிகளிலுமே வெற்றிபெற்றால் மட்டுமே, பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்பதால் போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 64வது லீக் போட்டியில் டெல்லி அணியை எதிர்த்து பஞ்சாப் அணி விளையாட உள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கான ரேஸில் முதலிடம் மட்டுமே உறுதியாகியுள்ள நிலையில், அடுத்த 3 இடங்களுக்கு எந்த அணி முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லி மற்றும் ஐதராபாத் அணிகளை தவிர்த்து மீதமுள்ள 7 அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில் பஞ்சாப் அணி ஆடவுள்ள 2 போட்டிகளில் வெற்றிபெற்றாலே எளிதாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறலாம்.

இதுவரை பஞ்சாப் அணி ஆடியுள்ள 12 போட்டிகளில் 6 வெற்றி, 6 தோல்விகளுடன் உள்ளது. அந்த அணியில் காயத்திற்கு பின் மீண்டு வந்த ஷிகர் தவான் இதுவரை சொல்லிக்கொள்ளும்படியான இன்னிங்ஸை ஆடவில்லை. அதேபோல் பந்துவீச்சாளர்களை பயன்படுத்துவதில் மோசமாக இருக்கிறார். ஆனாலும் வலுவான வீரர்கள் அணியில் இருப்பதால், ஷிகர் தவான் கேப்டன்சியில் செய்யும் தவறுகளை கண்டுக்கொள்ளப்படாமலேயே இருக்கிறது. அதேபோல் சிக்கந்தர் ராசாவை வைத்து பஞ்சாப் அணி உள்ளே, வெளியே என்று விளையாடி வருகிறது.
சாம் கரண், ஜித்தேஷ் சர்மா, லிவிங்ஸ்டன், அர்ஷ்தீப் சிங், ராகுல் சஹர், பிரப்சிம்ரன் சிங் உள்ளிட்டோர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பான ஃபார்மில் உள்ளதால், பஞ்சாப் அணிக்கு சாதகம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் தரம்சாலா மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்பதால் பஞ்சாப் அணி வீரர்கள் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னொரு பக்கம் டெல்லி அணியை பொறுத்தவரை ஏற்கனவே பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்துள்ளது. இதனால் டெல்லி அணி பெறப்போகும் ஒவ்வொரு வெற்றியும் மற்ற அணியின் பிளே ஆஃப் வாய்ப்பை முடிவுக்கு கொண்டு வரும். இதனால் எந்த அணியின் வாய்ப்பை டெல்லி அணி காவு வாங்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. அந்த அணியும் திடீரென ஃபார்முக்கு வந்துள்ளது. குறிப்பாக மிட்செல் மார்ஷ், டேவிட் வார்னர் உள்ளிட்டோர் அபாரமாக செயல்பட்டு வருகின்றனர்.