மொஹாலி: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் அணி மோத உள்ளது. இரு அணிகளுமே கடந்த போட்டியில் மோசமான தோல்வியை பெற்றதால், வெற்றிப்பாதைக்கு திரும்ப தீவிரமாக முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
16வது ஐபிஎல் தொடரின் 18வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதுகிறது. இதுவரை பஞ்சாப் அணி விளையாடியுள்ள 3 போட்டிகளில் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிக்கு எதிரான 2 வெற்றியையும், ஐதராபாத் அணிக்கு எதிராக ஒரு தோல்வியையும் சந்தித்துள்ளது.

பஞ்சாப் அணி கேப்டன் ஷிகர் தவான் 2 அரைசதங்களுடன் அபார ஃபார்மில் இருக்கிறார். இவருடன் பிரப்சிம்ரன் சிங், ஜித்தேஷ் சர்மா, ராஜபக்சே உள்ளிட்டோர் அபார ஃபார்மில் இருக்கிறார்கள். இவர்களுடன் கால்முட்டி காயத்தில் இருந்து மீண்டுள்ள இங்கிலாந்தை சேர்ந்த அதிரடி ஆல்ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டன் அணியுடன் இணைந்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் சாம் கரண், ராகுல் சஹர், அர்ஷ்தீப் சிங் உள்ளிட்டோர் பந்துவீச்சில் வலிமை சேர்த்து வருகிறார்கள். அவர்களுடன் ரபாடாவும் இன்றையப் போட்டியில் இணையவுள்ளார். இதனால் பஞ்சாப் அணியின் பலம் சற்று கூடியுள்ளது. மொஹாலியில் நடக்கும் இந்தப் போட்டியில் பஞ்சாப் அணி சொந்த மண்ணில் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்புவதில் தீவிரம் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் இரு ஆட்டங்களில் சென்னை மற்றும் டெல்லி அணியை எளிதாக வீழ்த்தியது. ஆனால் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில், கடைசி நேரத்தில் ரிங்கு சிங் ஐந்து பந்துகளில் ஐந்து சிக்சர்களை விளாசி வெற்றியை பறித்து சென்றார். இதுபோன்ற ஒரு வெற்றியின் மூலமாகவே குஜராத் அணியின் பயணம் தொடங்கியது.
இதுபோன்ற வலிமையான தோல்வியில் இருந்து குஜராத் அணி எப்படி மீண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் உடல்நலக்குறைவால் கடந்த ஆட்டத்தில் பங்கேற்காமல் ஓய்வில் இருந்த குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா மீண்டும் அணிக்கு திரும்ப உள்ளார். இதனால் சாஹா, சாய் சுதர்சன், சுப்மன் கில், டேவிட் மில்லர், விஜய் சங்கர் ஆகியோருடன் பேட்டிங் பலம் வலுவாக உள்ளது. பந்துவீச்சில் குஜராத் அணிக்கு நிகர் அந்த அணி மட்டும் தான். இருப்பினும் யாஷ் தயாளுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.