லக்னோ: நடப்பு ஐபிஎல் தொடரின் 21வது லீக் போட்டியில் லக்னோ அணியை எதிர்த்து பஞ்சாப் அணி விளையாடுகிறது. லக்னோ அணி இதுவரை விளையாடியுள்ள 4 போட்டிகளில் 3ல் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. அதேபோல் பஞ்சாப் அணி விளையாடியுள்ள 4 போட்டிகளில் 2ல் வெற்றிபெற்றும், 2ல் தோல்வியடைந்தும் புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது.
லக்னோ அணியில் கைல் மேயர்ஸ், ஸ்டாய்னிஸ், க்ருனால் பாண்டியா, நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் பதோனி ஆகியோர் நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள். இருப்பினும் கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் தீபக் ஹூடாவின் ஃபார்ம் மட்டுமே அந்த அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதேபோல் இன்றையப் போட்டியில் கைல் மேயர்ஸ் நீக்கப்பட்டு டி காக் சேர்க்கப்பட வாய்ப்புகள் உள்ளது.

லக்னோ அணியில் மார்க் வுட், ஆவேஷ் கான் மற்றும் உனாத்கட் சிறப்பாக பந்துவீசினாலும் அதிக ரன்களை விட்டுக் கொடுப்பது பிரச்சனையை ஏற்படுத்துகிறது. ஆனால் வேகப்பந்துவீச்சாளர்களின் தவறுகள் வெளியில் தெரியாத வகையில் அமித் மிஸ்ரா மற்றும் ரவி பிஷ்னாய் சிறப்பாக பந்துவீசு வருகிறார்கள். இதனால் லக்னோ அணி இன்றையப் போட்டியில் வெற்றிபெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேற தீவிரமாக முயற்சிக்கும்.
மறுபக்கம் பஞ்சாப் அணி தாங்கள் விளையாடிய கடைசி இரு போட்டிகளில் மோசமான தோல்வியை பதிவு செய்துள்ளது. ஐதராபாத் மற்றும் குஜராத் அணிகளுக்கு எதிராக பேட்ஸ்மேன்கள் மொத்தமாக சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இதனால் பஞ்சாப் அணி தங்களது பேட்டிங் பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. கடந்த இரு போட்டிகளில் சொதப்பிய ராஜபக்சே நீக்கப்பட்டு லிவிங்ஸ்டன் இந்தப் போட்டியில் இணைய அதிக வாய்ப்புகள் உள்ளது.

அதேபோல் குறைந்த ஸ்கோரை பேட்ஸ்மேன்கள் எடுத்தாலும் பஞ்சாப் அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார்கள். அர்ஷ்தீப் சிங், ரபாடா, ராகுல் சஹர், சாம் கரண், ஹர்பிரீத் பரார் ஆகியோர் மிரட்டலான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகின்றனர். லக்னோ மைதானத்தின் சிவப்பு மண் பிட்ச்சில் ஆட்டம் நடக்கவுள்ளதால், ஹை ஸ்கோரிங் ஆட்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லக்னோ மைதானத்தில் தன்மை கிட்டத்தட்ட மொஹாலி மைதானத்தின் தன்மை போலவே இருக்கும்.
இதனால் சமபலம் வாய்ந்த இரு அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் இரு ஆண்டுகளுக்கு முன் பஞ்சாப் அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் விளையாடினார். பின்னர் லக்னோ அணியின் அழைப்பால், பஞ்சாப் அணியில் இருந்து வெளியேறினார். இதனால் பஞ்சாப் - லக்னோ அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கூடுதல் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.