ஐதராபாத்: ஐபிஎல் தொடரில் முதல் இரு போட்டிகளை வென்று ஹாட்ரிக் வெற்றியை பெறுவதற்காகவும் பஞ்சாப் அணியும், முதல் இரு போட்டிகளில் தோல்வியடைந்து ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்கும் முனைப்பில் ஐதராபாத் அணியும் மோதவுள்ளது.
16வது ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு ஐதராபாத்தில் நடைபெறும் ஆட்டத்தில் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்த்து ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி விளையாட உள்ளது. கடந்த 2 சீசன்களில் 8-வது இடத்துக்கு தள்ளப்பட்ட ஐதராபாத் அணி இந்த ஆண்டும் மோசமான ஆட்டத்தையே தொடர்ந்து வருகிறது. முதல் இரு போட்டிகளில் ராஜஸ்தான் மற்றும் லக்னோ அணிகளிடம் மோசமாக தோல்வியடைந்தது.

குறிப்பாக அந்த அணியின் பேட்டிங் வரிசையில் எந்த வீரரும் சொல்லிக் கொள்ளும் வகையில் விளையாடவில்லை. அன்மோல்பிரீத், மயங்க் அகர்வால், ராகுல் த்ரிபாட்டி ஆகியோர் நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். கடந்த ஆட்டத்தில் அணிக்கு திரும்பிய கேப்டன் மார்க்ரம் டக்-அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அதுமட்டுமல்லாமல் ரூ.13.25 கோடிக்கு வாங்கப்பட்ட ஹாரி புரூக், சுழல் பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் களத்தில் நடனமாடி வருகிறார். அப்துல் சமத் மட்டுமே பேட்டிங்கில் அந்த அணியின் மானத்தை காப்பாற்றி செயல்படுகிறார்.
அடுத்தடுத்து இரு போட்டிகளில் தோல்வியடைந்த ஐதராபாத் அணி, ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் ஒவ்வொரு போட்டியிலும் ஐதராபாத் அணியின் தோல்வியடைந்ததால், சோகமாக இருக்கும் அந்த அணியின் உரிமையாளர் காவ்யா மாறனுக்கு மகிழ்ச்சியை கொடுப்பார்களா ஐதராபாத் அணியினர் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. மறுபக்கம் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் அணி தனது லீக் ஆட்டங்களில் கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகளை வீழ்த்தி மிரட்டியுள்ளது.
அந்த அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு சிறப்பாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த போட்டியில் வேகப்பந்துவீச்சாளர் ககிசோ ரபாடாவும் அணியில் இணைந்துள்ளார். அவருடன் சாம் கரண், ராகுல் சஹர், அர்ஷ்தீப் சிங், நேதன் எல்லீஸ் உள்ளிட்டோர் இருப்பதால் பஞ்சாப் அணியின் பலம் எக்கச்சக்கமாக உயர்ந்துள்ளது. இந்த ஆட்டத்தில் தங்களது வெற்றியை தொடர பஞ்சாப் அணியும், சரிவில் இருந்து மீண்டு வர ஐதராபாத் அணியும் போராடும் என்பதால் போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.