மொஹாலி: பஞ்சாப் அணியின் அதிரடி வீரர் பனுகா ராஜபக்ஷா, கொல்கத்தா அணியின் சிறந்த பந்துவீச்சாளரான சுனில் நரைனை பொளந்து கட்டியுள்ளார். இதனால் பனுகா ராஜ்கபக்ஷாவை பார்க்கும் போது, ஜெயசூர்யாவின் ஆட்டம் நினைவுக்கு வருவதாக ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
கொல்கத்தா அணிக்காக 2012ஆம் ஆண்டு முதல் விளையாடி வருபவர் சுனில் நரைன். கொல்கத்தா வெற்றிபெற்ற இரு ஐபிஎல் கோப்பைகளுக்கும் முக்கிய காரணமாக அமைந்தவர்.
தொடக்க வீரராக வந்தால் பவர் பிளேயில் பவுண்டரி, சிக்சர் விளாசும் திறமை கொண்டவர். ஆனால் பந்துவீச்சு என்று வந்துவிட்டால், யாராலும் சுனில் நரைன் பந்துவீச்சில் ரன்கள் சேர்க்க முடியாது.

கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாக ஐபிஎல் தொடரில் ஆடிவரும் சுனில் நரைனின் எகானமி 6.65 மட்டும் தான். ஒவ்வொரு போட்டியிலும் 4 ஓவர்கள் பந்துவீசினால் 30 ரன்களுக்கு குறைவாக மட்டுமே விட்டுக்கொடுத்து சில விக்கெட்டுகளையும் வீழ்த்துபவர். இவரது பந்துவீச்சில் தோனி இதுவரை ஒரேயொரு பவுண்டரி மட்டுமே விளாசியுள்ளார்.
இந்த நிலையில் மொஹாலியில் பஞ்சாப் - கொல்கத்தா அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் நிதீஷ் ராணா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதில் பிரப்சிம்ரன் சிங் 23 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் அதிரடி வீரர் பனுகா ராஜபக்ஷா கொல்கத்தா அணியின் ஒவ்வொரு பந்துவீச்சாளரையும் பொளந்து கட்டினார்.
இவரை கட்டுப்படுத்த பவர் பிளே ஓவர்களுக்குள்ளாகவே சுனில் நரைன் அழைத்து வரப்பட, அவரையும் ஒரு கை பார்த்தார் பனுகா ராஜபக்ஷா. சுனில் நரைன் வீசிய முதல் ஓவரில் இரு பவுண்டரி ஒரு சிக்சரை விளாசிய பனுகா, அடுத்த ஓவரில் 10 ரன்களை எடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் 2022ஆம் ஆண்டுக்கு பின் ஐபிஎல் தொடரில் பவர் பிளே ஓவர்களில் அதிக ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ள வீரராக பனுகா ராஜபக்ஷா உருவெடுத்துள்ளார்.
30 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தியுள்ளார் பனுகா ராஜபக்ஷா. இலங்கை அணியின் இடதுகை பேட்ஸ்மேன் ஒருவர் எந்தவித அச்சமும் இல்லாமல் பந்துவீச்சாளர் பற்றிய எந்த பயமும் இல்லாமல் பேட்டை சுழற்றுவது, ஜெயசூர்யாவை நினைவுபடுத்துவதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இவ்வளவு சிறப்பாக ஆடும் பனுகா ராஜபக்ஷா தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.