டோமினிக்கா : மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 2023-25ஆம் ஆண்டிற்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளில் இந்தியா தனது முதல் போட்டியை அபாரமாக வென்று இருக்கிறது.
டோமினிக்காவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய அந்த அணி வீரர்கள் அஸ்வின் சுழலில் சிக்கி 150 ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து முதல் நாளிலேயே இந்திய அணி தங்களது முதல் இன்னிங்சை தொடங்கியது.

இதில் அறிமுக வீரர் ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் அபாரமாக விளையாடி அடுத்தடுத்து சதம் விளாசினர். இதில் ரோகித் சர்மா 103 ரன்களில் ஆட்டமிழக்க, சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் 171 ரனகள் குவித்து அசத்தினார். கில், ரஹானே ஆகியோர் சோபிக்க தவறினர்.
எனினும் பொறுப்புடன் விளையாடிய விராட் கோலி 76 ரன்கள் எடுத்த நிலையில், பெவிலியன் திரும்பினார். ஜடேஜா 37 ரன்கள் எடுத்து களத்தில் நின்ற நிலையில், இந்திய அணி 421 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்த போது ரோகித் சர்மா டிக்ளேர் செய்தார்.
இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் 271 ரன்கள் பின்தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்சில் விளையாடினர். இதனையடுத்து, இந்திய வீரர்களின் பந்துவீச்சு தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல், வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் தடுமாறினர். சுழற்பந்துவீச்சுக்கு ஆடுகளம் சாதகமாக இருந்ததால், ஒரு முனை அஸ்வின் மற்றும் மறுமுனை ஜடேஜா என்று இரக்ககமே இல்லாமல், ரோகித் சர்மா கேப்டன்ஷிப் செய்தார்.
கேப்டன் பிராத்வெயிட், தேஜ்நரைன் சந்தர்பால் ஆகியோர் தலா 7 ரன்களில் ஆட்டமிழக்க, ரேமன் 11 ரன்னிலும், பிளாக்வுட் 5 ரன்னிலும் பெவிலியன் திரும்பினர். ஜோஸ்வா 13 ரன்கள் சேர்க்க, அந்த அணியின் அறிமுக வீரரும், முதல் இன்னிங்சில் அதிக ஸ்கோர் அடித்த அத்னேஸ் 28 ரன்கள் மட்டுமே சேர்தது பெவிலியன் திரும்பினார்.
மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 108 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து வெஸ்ட் இண்டீஸ் அணி இழந்த நிலையில், கூடுதலாக அரைமணி நேரம் வழங்கப்பட்டது. இதில் வாரிகன் 18 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அஸ்வின் அவரை வீழ்த்தினார்.
இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் 2வது இன்னிங்சில் 130 ரன்களில் சுருண்டது. முதல் இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்திய அஸ்வின், 2வது இன்னிங்சில் 71 ரன்னுக்கு 7 விக்கெட்டுகளை சாய்த்தார். இது வெளிநாட்டு மண்ணில அஸ்வினின் சிறப்பான செயல்பாடாகும். எனினும் அறிமுக போட்டியில் அபாரமாக விளையாடிய ஜெய்ஸ்வாலுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.