மும்பை: 2027 உலகக் கோப்பைக்கு பிறகு, ஒருநாள் கிரிக்கெட்டின் எதிர்காலம் கவலை அளிக்கும் விதத்தில் இருக்கும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார். விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா போன்ற நட்சத்திர வீரர்கள் ஓய்வுபெற்ற பிறகு, ஒருநாள் கிரிக்கெட் நிலை என்னவாகும் என்று தாம் அஞ்சுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
தற்போது, கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவின் பங்களிப்பே ஒருநாள் போட்டிகளை ரசிகர்களுக்குத் தொடர்புடையதாக வைத்துள்ளது. இவர்களின் ஓய்வுக்குப் பிறகு, யார் தொடர்ந்து விளையாட்டைப் பார்ப்பார்கள் என்றும் அஸ்வின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர், "2027 உலகக் கோப்பைக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளின் எதிர்காலம் குறித்து எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. நான் கவலைப்படுகிறேன். ரசிகர்கள் எதைப் பார்க்க விரும்புகிறார்கள் என்பதை நாம் அறிய வேண்டும்.டெஸ்ட் போட்டிக்கு என்று தனி ஒரு இடம் இருக்கிறது. ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு அப்படி ஒரு இடம் இல்லை."
"ரோஹித்தும் விராட்டும் விஜய் ஹசாரே டிராபிக்குத் திரும்பியபோது மக்கள் அதைப் பார்க்கத் தொடங்கினர். விளையாட்டு தனிநபர்களை விடப் பெரியது என்றாலும், சில சமயங்களில் இத்தகைய நட்சத்திர வீரர்களே விளையாட்டுக்கு முக்கியத்துவத்தைக் கொடுக்க வேண்டும். அவர்கள் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதை நிறுத்திவிட்டால் என்ன நடக்கும்?" என்றும் அஸ்வின் கேள்வி எழுப்பியுள்ளார்.
"ஒரு காலத்தில் ஒரு நாள் கிரிக்கெட் மிகவும் சிறந்த பார்மட் ஆக இருந்தது. அதுதான் தோனி போன்ற சிறந்த வீரர்களை நமக்கு தந்தது. தோனி, 10, 15 ஓவர் வரை சிங்கிள்ஸ் மட்டும் எடுத்து இறுதியில் அதிரடி காட்டுவார். ஆனால் தற்போது தோனி போன்ற வீரர்கள் நமக்கு கிடைப்பதில்லை. ஏனென்றால் அப்படி ஒரு ஆட்டத்தை வழங்கக்கூடிய சூழலும் ஒரு நாள் கிரிக்கெட் ஏற்படுத்துவதில்லை."
"ஏனென்றால் நீங்கள் இரண்டு புதிய பந்துகளை வைத்து விளையாடுகிறீர்கள். அது மட்டும் இல்லாமல் சர்க்கில்குள் ஐந்து வீரர்கள் இருக்கிறார்கள். இதேபோன்று ஒரு நாள் கிரிக்கெட் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை நாம் பார்க்க வேண்டும். உலகக்கோப்பையை எப்படி நடத்துவது என்பது குறித்தும் நாம் யோசிக்க வேண்டும். தற்போது ஒவ்வொரு ஆண்டிலும் ஏதேனும் ஒரு ஐசிசி தொடர் இருக்கிறது. இது வருமானத்திற்காக நடத்தப்படுகிறது."
"ஆனால் FIFA எவ்வாறு உலககோப்பை போட்டிகளை நடத்துகிறது என்று பாருங்கள். உலகம் முழுவதும் கால்பந்து லீக் தொடர் நடத்தப்படுகிறது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக்கோப்பை நடத்தப்படுகிறது. இதன் மூலம் உலகக்கோப்பைக்கான சிறப்பு பாதுகாக்கப்படுகிறது. தற்போது அதிக அளவு இரு தரப்பு தொடர்களும், அதிக உலகக்கோப்பை தொடர்களும் நடத்தப்படுவது நல்லதுக்கு கிடையாது" என்று அஸ்வின் கூறியுள்ளார்.