சென்னை: ரவிச்சந்திரன் அஸ்வின், 2024-2025 பார்டர் கவாஸ்கர் தொடரின் போது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஆனால், அதைத் தொடர்ந்து ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார், அங்கு ஐந்து முறை சாம்பியனான சென்னை அணி, 9.75 கோடி இந்திய ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்தது.
இந்த தொடரில் வெறும் 7 விக்கெட் மட்டுமே வீழ்த்திய நிலையில், தற்போது ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். மேலும் தாம் வெளிநாட்டு லீக்களில் விளையாட விரும்புவதாகக் குறிப்பிட்டார். ஐபிஎல் தொடரில் விளையாடும் இந்திய வீரர்களை, பிசிசிஐ வெளிநாட்டு லீக்களில் பங்கேற்க அனுமதிப்பதில்லை.

ஆனால், அஸ்வின் இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதால், உலகளவில் தனக்கு விருப்பமான எந்த லீகிலும் விளையாட முடியும். இது குறித்து பேசிய முன்னாள் இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஆகாஷ் சோப்ரா, "ரவிச்சந்திரன் அஸ்வின் ஐபிஎல் விடைபெறுகிறார் மற்றும் உலகெங்கிலும் உள்ள பல்வேறு லீக்களில் விளையாடப் போவதாகக் கூறுகிறார்."
"அவர் புதிய பாதையை உருவாக்குகிறார். அவரது ஐபிஎல் பயணம் அற்புதமாக இருந்தது. ஆனால் அனைத்து நல்ல கதைகளும் முடிவுக்கு வரும். அவரது கதை இங்கே முடிகிறது. இது பிற இந்திய வீரர்களும் வேறு லீக்களில் விளையாடலாம் என்பதைக் குறிக்கிறதா?".
"அவர் தனது பெயரை எங்கு வைக்கிறாரோ, அங்கு தேர்ந்தெடுக்கப்படுவார் மற்றும் நன்றாக செயல்படுவார். இந்திய வீரர்கள் வேறு லீக்களில் விளையாட அனுமதிக்கப்படவில்லை. ஐபிஎல் தனித்துவத்தை பாதுகாக்கவே இது. வேறிடத்தில் விளையாட வேண்டுமானால், நீங்கள் சர்வதேச கிரிக்கெட்டில் மட்டுமல்ல, ஐபிஎலிலிருந்தும் ஓய்வு பெற வேண்டும்."
"இது சற்று பெரிய நிபந்தனையாகும். ஐபிஎல் பணத்திற்கு 'டாடா பை-பை' சொன்னால் மட்டுமே வேறு இடத்தில் விளையாட முடியும். அப்படி இருக்கும் வீரர்கள் மிகவும் குறைவு. ரவிச்சந்திரன் அஸ்வின் மிகவும் வித்தியாசமான ஒரு விஷயம் செய்கிறார். 9.75 கோடி ரூபாய் ஒப்பந்தம் இருந்தும் விலகுகிறார். அனைவரும் இதைச் செய்ய முடியாது."
" யாராவது குறைவான பணத்தில் வாங்கப்பட்டால், வெளியே யாரும் அவரை வாங்க மாட்டார்கள். இங்கு நல்ல பணம் பெறுபவர் ஏன் விலக வேண்டும்? ரவிச்சந்திரன் அஸ்வினை கொண்டாடுவோம். புள்ளிவிவரங்களை ஒதுக்கி வைத்து, அவர் சில அற்புதமான விஷயங்களை செய்துள்ளார். பந்து வீச்சாளராக அவர் தொடர்ந்து சிறப்பாக இருந்தார். இந்த வடிவம் ஒரு சுழற் பந்து வீச்சாளருக்கு மிகவும் கடினம். அவர் சிறப்பாக இருந்தார். தொடர்ந்து பேட்ஸ்மேனை மிரட்டினார். அவர் இரண்டு ஒத்த பந்துகளை வீசியதாகத் தோன்றவில்லை."