: இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது மூத்த வீரர் என்றால் அது அஸ்வின் தான். பேட்டிங்கில் எப்படி ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் மதிக்கத்தக்க வீரர்களாக திகழ்கிறார்களோ, அதை போல் பந்துவீச்சில் அஸ்வின் ஜாம்பவான் அந்தஸ்தை எப்போதோ பெற்றுவிட்டார்.
இங்கிலாந்துக்கு எதிரான நடப்பு டெஸ்ட் தொடரில் கூட 500 விக்கெட்டுகளை கடந்து அஸ்வின் சாதனை படைத்திருக்கிறார். இந்த நிலையில் அஸ்வினுக்கு உரிய மரியாதை கொடுக்காமல் பிசிசிஐ அவமானப்படுத்தி விட்டதாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அண்மையில் பிசிசிஐ வீரர்களுக்கான ஊதிய ஒப்பந்தப் பட்டியலை அறிவித்தது. இதில் a+,a,b, c என நான்கு வகை பிரிக்கப்பட்டு இருக்கிறது. ஏ ப்ளஸ் பிரிவு வீரர்களுக்கு 7 கோடி ரூபாய் சம்பளமும்,ஏ பிரிவு வீரர்களுக்கு 5 கோடி ரூபாய் சம்பளமும் பி பிரிவு வீரர்களுக்கு மூன்று கோடி ரூபாய் சம்பளமும், சிபிரிவு வீரர்களுக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளமும் வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் அதிகபட்ச சம்பளமான ஏ ப்ளஸ் பிரிவில் வெறும் நான்கு வீரர்கள் மட்டும்தான் இடம் பிடித்திருக்கிறார்கள். அதில் ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா, ஜடேஜா ஆகியோர் இருக்கிறார்கள். இந்த நான்கு வீரர்களை போல் அஸ்வினும் சீனியர் வீரர்கள் தான். ஆனால் அஸ்வினுக்கு ஐந்து கோடி ரூபாய் சம்பளமான ஏ பிரிவில் தான் அவருடைய பெயர் சேர்க்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட் மட்டும்தான் விளையாடுகிறார் என்று ஒரு வாதத்தை முன் வைத்தாலும் அதுவும் சரி கிடையாது. ஏனென்றால் அஸ்வின் சமீபத்தில் நடந்த டி20 உலக கோப்பையிலும் 50 உலகக் கோப்பையிலும் இந்திய அணியில் இடம் பிடித்திருக்கிறார். இப்படி மூன்று பிரிவு கிரிக்கெட் போட்டிகளிலும் அஸ்வின் தொடர்ந்து விளையாடி வருகிறார்.
மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் தொடர்ந்து விளையாட ஆர்வம் காட்டி வருகிறார். இப்படி இருக்கும் பட்சத்தில் அஸ்வினுக்கு மரியாதை கொடுக்கும் விதமாக ஏ ப்ளஸ் பிரிவில் தான் அவருடைய பெயர் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை. அவருக்கு ஏ பிரிவு தான் வழங்கப்பட்டிருக்கிறது. ரோகித் சர்மா,கோலி, பும்ரா, ஜடேஜாவை விட அஸ்வின் கடும் உழைப்பை செலுத்தி வரும் நிலையில் அவருக்கு மட்டும் ஏன் இந்த மரியாதை வழங்கப்படவில்லை என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.