மும்பை: 2025 ஆம் ஆண்டு யாரும் எதிர்பாராத வகையில் இந்திய டெஸ்ட் அணியின் தூண்களாக இருந்த அஸ்வின், கோலி, ரோகித் என்ற 3 ஜாம்பவான்களும் ஓய்வு பெற்றுள்ளனர். ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. இந்தத் தொடரின் போதே தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது ஓய்வு முடிவை அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு தயாராகும் முன்பாக, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதற்கு நடுவே, விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார்.

இந்த நிகழ்வுகள் குறித்து அஸ்வின் தனது யூடியூப் சேனலில் பேசியுள்ளார். அதில்"நான் ஆஸ்திரேலியாவில் எனது ஓய்வு முடிவை அறிவித்தேன். ஆனால், ரோகித் சர்மாவும் விராட் கோலியும் இவ்வளவு விரைவாக டெஸ்ட் கிரிக்கெட்டை விட்டு விலகுவார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை. ரோகித் சர்மாவால் 100 டெஸ்ட் போட்டிகளை எட்ட முடியுமா என்று கேட்டால், நிச்சயமாக அவரால் அது சாத்தியமாகியிருக்கும்.
ரோகித் சர்மா மிகவும் தாமதமாகவே டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். காயங்கள் அவரது ஆரம்பகால வாய்ப்புகளை பறித்துவிட்டன. அவர் முன்னதாகவே அறிமுகமாகியிருந்தால், இப்போது கூடுதலாக 30 முதல் 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருப்பார். ஆனால், விராட் கோலியின் இந்த ஓய்வு முடிவு எனக்கு பல கேள்விகளை எழுப்புகிறது.
அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் இன்னும் ஒரு அல்லது இரண்டு ஆண்டுகள் மட்டுமே உள்ளதா? உடல் ரீதியாக அவர் சோர்ந்துவிட்டாரா? அல்லது மனதளவில் அவரது உறுதி குறைந்துவிட்டதா? அழுத்தங்களை சமாளிக்கும் அவரது திறன் குறைந்துவிட்டதா? ஆனால், களத்தில் அவர் இன்னும் ஆற்றலுடன் தோன்றினார். இந்த முடிவுக்கு பின்னால் உள்ள உண்மையான காரணம் என்னவென்று புரியவில்லை, தற்போது அணியின் சீனியர் வீரர்களை 2 பேரும் ஓய்வு பெற்று விட்டார்கள்.
இதனால் இந்திய அணி ஆரம்ப கட்டத்தில் கொஞ்சம் தடுமாறும் என்பது உண்மை தான். இளம் வீரர்கள் தான் இந்த வீரர்களின் ஓய்வால் பாதிக்கப்படுவார்கள். ஆனால் ஒன்று மட்டும் சொல்ல முடியும் கம்பீரின் காலம் தொடங்கிவிட்டது. ஆனால் இங்கிலாந்து தொடரில் பும்ராவை கேப்டனாக நியமிப்பது தான் அணிக்கு நல்ல முடிவாக இருக்கும் என்று அஸ்வின் கூறியுள்ளார்.