சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளரான அஸ்வின் வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் ஆறு விக்கெட் வீழ்த்தி அசத்தினார். அது மட்டும் இல்லாமல் பேட்டிங்கில் முதல் இன்னிங்சில் சதம் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
இந்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை ஐந்து விக்கெட் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் வார்னேவை அஸ்வின் சமன் செய்திருக்கிறார். இதேபோன்று டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் அஸ்வின் தற்போது எட்டாவது இடத்தில் இருக்கிறார்.

இந்த நிலையில் 38 வயதான அஸ்வின் இங்கிலாந்து அணிக்காக விளையாடி இருந்தால் அவரை எப்போதோ ஓய்வு பெற சொல்லி இருப்பார்கள் என்று இந்திய வம்சாவளியை சேர்ந்த இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மோன்டி பனேசர் விமர்சித்திருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பனேசர், அஸ்வின் மட்டும் இங்கிலாந்தில் இருந்திருந்தால் அவரை எப்போதும் ஓய்வு பெற சொல்லி இருப்பார்கள்.
ஏனென்றால் இங்கிலாந்து அணி எப்போதுமே இளைஞர்களுக்கு அதிக அளவில் வாய்ப்பு கொடுப்பார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டில் பரிசோதிக்கும் முறை இங்கிலாந்து அணியிடம் இருக்கிறது. ஆனால் இந்தியாவில் அப்படி இல்லை. என்னைக் கேட்டால் அஸ்வினை விட ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயான் தான் சிறந்த வீரர் என்று கூறுவேன்.
அஸ்வின் இந்தியாவில் மட்டும் தான் சிறப்பாக பந்து வீசுவார். அஸ்வின் பந்து வீசும் போது ஒரு பேட்ஸ்மேன் எவ்வாறு யோசிப்பார் என்பதை மட்டுமே கருத்தில் கொள்வார். பேட்ஸ்மேன்களின் மைனஸ் என்ன என்பதை தெரிந்து கொண்டு அதை பயன்படுத்தி விக்கெட் எடுப்பதில் அஸ்வின் வல்லவர். இதுதான் அஸ்வினுக்கு இருக்கும் மிகப்பெரிய பலம்.
அது மட்டுமில்லாமல் அஸ்வினுக்கு நன்றாக பேட்டிங் செய்யவும் வருகிறது. இதனால் தான் பேட்ஸ்மேன்கள் என்ன யோசிப்பார்கள் என்று அஸ்வினுக்கு தெரிகிறது என்று பனேசர் கூறியிருக்கிறார். நாதன் லயான் தற்போது 530 விக்கெட்டுகள் வீழ்த்தி ஏழாவது இடத்தில் இருக்கிறார். இதனால் வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் 9 விக்கெட்டுகளை வீழ்த்தினால், நாதன் லயானை முந்தி விடுவார். இங்கிலாந்துக்கு எதிராக அஸ்வின் 24 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 114 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார். பேட்டிங்கில் 1086 ரன்கள் குவித்திருக்கிறார். இதில் ஒரு சதம் அடங்கும்.