மும்பை: ஐபிஎல் இறுதிப்போட்டி முடிவடைந்த அன்றைய நாள் இரவு 3ம் கட்ட இந்திய வீரர்கள் இங்கிலாந்துக்கு புறப்பட்டு சென்றுள்ள சம்பவம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றியை பதிவு செய்ததோடு, 5வது முறையாக சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியது. இதனால் உற்சாகமடைந்த சிஎஸ்கே வீரர்கள் இரவெல்லாம் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் ஐபிஎல் கோப்பையை எடுத்துக் கொண்டு கோவில் கோவிலாக சிஎஸ்கே நிர்வாகமும் பறந்து வருகிறது. இதனால் கொண்டாட்டம் அடுத்தக்கட்டத்தை எட்டும் என்று பார்க்கப்பட்டது.

ஆனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட இந்திய வீரர்கள் கொண்டாட்டத்தை பின்வைத்துவிட்டு, உடனடியாக இங்கிலாந்துக்கு விமானம் ஏறியுள்ளனர். ஏற்கனவே லீக் போட்டிகள் முடிவடைந்த பின் விராட் கோலி தலைமையில் முதல் கட்ட இந்திய வீரர்கள் இங்கிலாந்தில் பயிற்சியை தொடங்கினர். இதையடுத்து குவால்ஃபையர் 2வது போட்டி முடிவடைந்த பின் ரோகித் சர்மா தலைமையில் இந்திய வீரர்கள் பலரும் இங்கிலாந்து சென்று சேர்ந்தனர்.
இந்த நிலையில் இறுதிப்போட்டிக்கு பின் குஜராத் மற்றும் சென்னை அணிகளில் விளையாடிய டெஸ்ட் அணி வீரர்கள் நேற்றிரவே இங்கிலாந்துக்கு புறப்பட்டுள்ளனர். சென்னை அணியில் இருந்து ரஹானே, ஜடேஜா ஆகியோரும், குஜராத் அணியில் இருந்து சுப்மன் கில், கேஎஸ் பரத், முகமது ஷமி ஆகியோரும் இங்கிலாந்து புறப்பட்டுள்ளனர். இதன் மூலம் இந்திய அணி வீரர்கள் அனைவரும் இங்கிலாந்தில் தரையிறங்கியுள்ளனர். ஒருநாள் கூட ஓய்வின்றி இந்திய வீரர்கள் உடனடியாக பயணம் மேற்கொண்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில், இந்திய அணி தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இன்னொரு பக்கம் ஆஸ்திரேலிய அணி ஒரு மாதத்திற்கு மேலாக இங்கிலாந்திலேயே முகாமிட்டுள்ளது. அந்த அணியின் ஸ்டீவ் ஸ்மித் இங்கிலாந்து ஆடுகளங்களில் சிறப்பாக விளையாட கவுண்டி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார். சமபலம் கொண்ட இரு அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் மோதுவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.