மும்பை : ஐபிஎல் தொடர் என்பது இளைஞர்களுக்கான தொடர் மட்டுமல்ல சீனியர்களும் தாம் யார் என்று வெளி உலகத்திற்கு காட்ட பயன்படுத்தப்படும் களமாகவும் இருக்கிறது. அண்மையில் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட ரஹானேவை மினி ஏலத்தில் எந்த அணியுமே எடுக்க ஆர்வம் காட்டவில்லை.
ஆனால் சிஎஸ்கே அணி ரஹானேவை வாங்கியது. முதலில் தற்போது சிஎஸ்கே அணிக்காக முதல் போட்டியில் விளையாடிய ரகானே நடப்பு சீசனில் அதிவேக அரை சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். இதுகுறித்து பேசிய ரஹானே, இந்த இன்னிங்ஸை நான் மிகவும் மகிழ்ச்சியுடன் விளையாடினேன்.

இந்தப் போட்டியில் நான் விளையாட போகிறேன் என்று எனக்கு டாஸ் போடுவதற்கு முன்பு தான் தெரிய வந்தது. துரதிர்ஷ்டவசமாக மோயின் அலிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் பயிற்சியாளர் பிளமிங் டாஸ் போடுவதற்கு முன்பு இன்று நீ விளையாடுகிறாய் என்று கூறினார். ஐபிஎல்லுக்கு முன்பு, நான் நிறைய உள்ளூர் போட்டிகளில் விளையாடி ரன்களை சேர்த்தேன்.
நான் நல்ல உடல் தகுதியுடன் இருக்க வேண்டும் என தீவிர முயற்சி செய்தேன். என்னுடைய பேட்டிங் டைமிங்கில் கவனம் செலுத்தினேன். போட்டியில் விளையாடுகிறோம் என்ற நினைப்பு பயிற்சியின் போது இருக்க வேண்டும். ஐபிஎல் என்பது மிகவும் நெடுந்தொடர். இதில் நமக்கு எப்போது வாய்ப்பு கிடைக்கும் என்று தெரியாது.

இதனால் நாம் எப்போதுமே தயார் நிலையில் இருக்க வேண்டும். மும்பை எனது சொந்த ஊர் வான்கடே மைதானத்தில் நான் நிறையாகவே விளையாடி இருக்கிறேன். ஆனால் இங்கு இந்திய அணிக்காக ஒரு டெஸ்ட் போட்டியில் கூட விளையாடியதில்லை. அது எனக்கு வருத்தம் தான். இந்தியாவுக்காக ஒரு ஒரு டெஸ்டில் ஆவது விளையாடி விட வேண்டும்.
அதுதான் என்னுடைய ஆசை. சிஎஸ்கே முகாம் எனக்கு பிடித்திருக்கிறது.தோனி பாய், பயிற்சியாளர் பிளமிங்கும் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்திருக்கிறார்கள். நான் வாய்ப்பு கிடைக்காத போது எப்போதுமே நான் நன்றாக விளையாடுவது போல் மனக்கண்ணில் நினைத்துப் பார்ப்பேன். அது நல்ல பலனை தந்தது என்று ரகானே கூறியுள்ளார்.