டிராவிட்டின் திட்டம்
டி20 உலகக்கோப்பை தொடருக்காக ரோகித் சர்மாவும், ராகுல் டிராவிட்டும் ஏற்கனவே அணியை தேர்வு செய்துவிட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து பேசியிருந்த டிராவிட், " நான் தேர்வு செய்த வீரர்களுக்கு இனி வரும் போட்டிகளில் தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கப்படும்" எனக்கூறியிருந்தார். ஆனால் இந்தியாவின் இரண்டு அணிகள் மாறி மாறி விளையாடி வந்ததால் கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது.
இன்றைய போட்டி
இந்நிலையில் இன்று ஒரு வீரரை உறுதி செய்யலாம். வெஸ்ட் இண்டீஸுடனான 5 டி20 போட்டிகள் தான் இந்திய அணிக்கு ஆசியக்கோப்பை தொடருக்கான பயிற்சியாக இருக்கப்போகிறது. இதற்கான அணியில் ஓப்பனிங்கில் ரோகித் சர்மா, இஷான் கிஷான், மிடில் ஆர்டரில் சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்டோர் முதன்மை தேர்வாக உள்ளனர்.
2 வீரர்கள் போட்டி
ஆனால் தீபக் ஹூடா - ஸ்ரேயாஸ் ஐயர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. ஐபிஎல் தொடர் முதலே ஸ்ரேயாஸ் ஐயர் வேகப்பந்துவீச்சுக்கும், பவுன்சர் பந்துகளுக்கும் திணறி மோசமாக அவுட்டானது நன்றாக தெரிந்தது. டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெறும் ஆஸ்திரேலியாவில் வேகப்பந்துவீச்சு மற்றும் பவுன்சர் பந்துகள் தான் முக்கியமாக இடம்பெறும் என்பதால் இந்திய அணியில் அவரின் இடம் சந்தேகமானது.
யாருக்கு வாய்ப்பு
இது ஒருபுறம் இருக்க, திடீரென டி20 அணியில் தீபக் ஹூடாவை கொண்டு வந்தார் ராகுல் டிராவிட். அவருக்கு ஓப்பனிங், லோயர் ஆர்டர் என தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுக்க, ஹூடாவும் அதிரடி காட்டினார். மேலும் பவுலிங்கில் ஹூடா முக்கிய விக்கெட்களை எடுத்து உதவுகிறார். இதனால் தற்போது இந்தியாவின் மிடில் ஆர்டரில் தீபக் ஹூடாவா அல்லது ஸ்ரேயாஸ் ஐயரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இன்று வெளியாகும் திட்டம்
எனவே இன்று களமிறங்கவுள்ள இந்தியாவின் மெயின் அணியில் அவர்கள் இருவரில் யாருக்கு டிராவிட் வாய்ப்பு தருவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. யார் வாய்ப்பு பெறுகின்றாரோ, அவர் தான் டி20 உலகக்கோப்பைகான அணியில் இருப்பார் என்பதை உறுதி செய்துவிடலாம்.