பெங்களூரு: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இன்னும் 35 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் இந்திய அணி தங்களுடைய உறுதியான பிளேயிங் லெவனை வைத்து எந்த ஒரு கிரிக்கெட் போட்டியிலும் விளையாடவில்லை.
இந்த நிலையில் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக அணியின் பேட்டிங் வரிசையில் மாற்றி தேவையில்லாத சோதனையில் ஈடுபட்டு வருகிறார் என்று ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த நிலையில் ஆசிய கோப்பை தொடருக்கு முன்பு செய்தியாளர்களை டிராவிட் சந்தித்தார். அப்போது பத்திரிகையாளர் ஒருவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் உங்களுடைய பரிசோதனை தொடருமா என்று கேட்டார். இதற்கு பதில் அளித்த டிராவிட், இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் நம்பர் 4, நம்பர் 5, நம்பர் 6 ஆகிய இடங்களுக்கு சரியான வீரர்கள் அமையவில்லை. இதுவே நீங்கள் ஒரு 18 மாதத்திற்கு முன்பு இந்த கேள்வியை கேட்டிருந்தால் நான் ஸ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல் ரிஷப் பண்ட் இந்த மூன்று வீரர்கள் தான் நடுவரசையில் விளையாட போகிறார்கள் என்று உறுதியாக உங்களுக்கு பதில் அளித்து இருப்பேன்.
ஆனால் இந்த மூன்று வீரர்களுமே ஒரே சமயத்தில் காயம் அடைந்து அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள். இந்த மூன்று வீரர்களுமே இல்லாத நிலையில் நம்பர் 4, 5 மற்றும் ஆறாவது இடத்திற்கு மாற்று வீரர்களை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் அடுத்தது யார் இருக்கிறார்கள் என்று பார்த்து அவர்களுக்கு நாங்கள் வாய்ப்பு வழங்கினோம். அதில் சிலர் திறமை வாய்ந்த வீரராக இருந்தாலும் நடு வரிசையில் தங்களுடைய இடத்தை பூர்த்தி செய்து கொள்ள முடியவில்லை.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நாம் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் குறைந்த அளவில்தான் விளையாடினோம். முக்கிய வீரர்கள் இல்லாத நிலையில் டி20 உலக கோப்பை மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என இரண்டு முக்கிய தொடர்களில் கவனம் செலுத்தினோம். இதனால் எந்த வீரர்கள் எந்த இடத்திற்கு தகுதியாக இருப்பார்கள் என்பதை சுழற்சி முறையில் நாங்கள் பயன்படுத்தினோம். இதனால்தான் பரிசோதனை முயற்சி மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டது.
தற்போது அதிர்ஷ்டவசமாக மூன்று வீரர்களும் சரியான நேரத்தில் காயத்திலிருந்து திரும்பி இருக்கிறார்கள்.இனி அவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதே முதல் பணி. முக்கிய கட்டத்தில் யாரேனும் காயம் அடைந்து வெளியேறி விட்டார்கள் என்றால் மாற்று வீரர்களை நாம் சரியாக விளையாட வைக்க வேண்டும். இதற்காக அவ்வப்போது பரிசோதனை முயற்சி மேற்கொள்ள வேண்டிய நெருக்கடி எங்களுக்கு ஏற்படுகிறது என்று டிராவிட் விளக்கம் அளித்தார்.