மும்பை: மும்பையில் நடைபெற்ற சியாட் விருது விழாவில் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருது இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு அளிக்கப்பட்டது. இந்த விருதை பெற்றுக் கொண்டு கேப்டன் ரோஹித் சர்மா பேசுகையில், வெற்றி, தோல்வி, முடிவுகள், ஸ்டாட்ஸ் உள்ளிட்டவற்றை பார்க்காமல் விளையாடக் கூடிய வகையில் இந்திய அணியை மாற்றியது என் கனவு என்றே சொல்ல வேண்டும்.
இந்திய அணி வீரர்கள் சுதந்திரமாக விளையாடக் கூடிய சூழலை உருவாக்க முடிந்தது. அதுதான் இந்திய அணியின் தேவையாகவும் இருந்தது. டி20 உலகக்கோப்பையை வெல்வதற்கும், இந்திய அணியின் மனநிலையை மாற்றியதற்கும் 3 பேர் எனக்கு ஆதரவாக இருந்தனர். அது பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் தான்.

ஏனென்றால் அவர்கள் இல்லாமல் என்னால் தனியாக எந்த முடிவையும் எடுத்திருக்க முடியாது. அதேபோல் இந்திய அணி வீரர்கள் யாரையும் மறக்கவே முடியாது. ஒவ்வொரு முறை சிக்கல் வந்த போதும், ஒவ்வொரு வீரர்களும் முன் வந்து இந்திய அணி பக்கம் ஆட்டத்தை திருப்பினர். இதன் காரணமாகவே சாம்பியன் பட்டத்தை வென்றோம்.
11 ஆண்டுகளுக்கு பின் முதல் ஐசிசி கோப்பையை வென்ற பின் வந்த மகிழ்ச்சியை சொல்லவே முடியாது. அந்த உணர்வை நம்மால் ஒவ்வொரு நாளும் உணர முடியாது. நீண்ட காலமாக நாம் ஐசிசி கோப்பைக்காக காத்திருந்திருக்கிறோம். உலகக்கோப்பையை வென்ற போது, அனைவருக்கும் மிகமுக்கியமான கொண்டாட்டமான நேரமாக அமைந்தது.
நாங்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த நாடே கோப்பையை வைத்து கொண்டாடியது. டி20 உலகக்கோப்பையுடன் இந்தியாவில் நடந்த கொண்டாட்டத்தை பற்றி சொல்ல வார்த்தைகளே கிடையாது. அந்த மகிழ்ச்சியை என்னால் இப்போதும் வெளிப்படுத்த முடியவில்லை. டி20 உலகக்கோப்பைக்கு பின், அடுத்ததாக 2 முக்கியமான சுற்றுப்பயணம் உள்ளது.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் ஆகியவற்றில் இந்திய அணி விளையாட உள்ளது. நிச்சயம் சவால் நிறைந்த பயணமாக இருக்கும். ஒரு முறை கோப்பையை வென்றுவிட்டால், அடுத்தடுத்து பட்டங்களை வெல்ல வேண்டும் என்ற ஆசை வரும். நான் மட்டுமல்லாமல் இந்திய அணி வீரர்கள் அப்படியான மனநிலையில் தான் உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாக இந்திய அணி மிகச்சிறந்த கிரிக்கெட்டை விளையாடி இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.