மும்பை : டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர்பான சாம்பியன் பட்டத்தை இந்திய அணி கைப்பற்றியதை அடுத்து ராகுல் டிராவிட் அந்தப் பதவியில் இருந்து விலகி இருக்கிறார். தன்னுடைய பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் அதனை மீண்டும் நீட்டிக்க விரும்பாத ராகுல் டிராவிட் இந்த முடிவை எடுத்துள்ளார்.
இதனால் இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக கம்பீர் நியமிக்கப்படுவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த சூழலில் டி20 உலக கோப்பையை வென்ற பிறகு ராகுல் டிராவிட் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது தான் அடுத்த வாரத்தில் இருந்து பணி இல்லாமல் இருக்கப் போகிறேன். எனக்கு யாராவது வேலை கொடுங்கள் என்று கிண்டலாக கேட்டார். இந்த சூழலில் சாம்பியன் பட்டத்தை ராகுல் டிராவிட் வெல்ல உதவியதால், அவருக்கான மவுஸ் அதிகரித்து இருக்கிறது. ஐபிஎல் தொடரில் பல அணிகள் தற்போது ராகுல் டிராவிட்டை தங்கள் அணியின் பயிற்சியாளராக சேர்க்க பல கோடிகள் கொடுக்க காத்திருக்கிறார்கள்.
இந்திய அணியின் பயிற்சியாளர் என்றால் ஆண்டுதோறும் அணியுடன் சுற்ற வேண்டும். ஆனால் ஐபிஎல் பயிற்சியாளர் என்றால் ஆண்டுக்கு வெறும் மூன்று மாதம் செலவழித்தால் போதும். இதனால் ஐபிஎல் பயிற்சியாளராக வர ராகுல் டிராவிட் முடிவெடுத்திருக்கிறார். ஏற்கனவே ராஜஸ்தான் அணியில் ராகுல் டிராவிட் இருந்ததால் அந்த அணி மீண்டும் டிராவிட்டை அழைக்க தீவிரம் காட்டி வருகிறது.
இந்த சூழலில் கம்பீர் தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக சென்றால் அவர் ஐபிஎல் அணியில் தொடர முடியாது.இதன் காரணமாக புதிய பயிற்சியாளர்கள் தேடும் பணியில் கொல்கத்தா அணியும் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக தெரிகிறது. இதனால் ராகுல் டிராவிட்டை கம்பீருக்கு பதில் பயிற்சியாளராக நியமிக்க அந்த அணி தீவிரம் காட்டி வருகிறது.
t20 உலக கோப்பையை வென்றதால் ராகுல் டிராவிட்டின் வருகை கொல்கத்தா அணியை மேலும் பலமாக்கும் என்று அந்த அணி நிர்வாகம் நம்புகிறது. ஏற்கனவே சாம்பியன் பட்டத்தை தற்போது வென்றுள்ள கொல்கத்தா அணிக்கு ராகுல் டிராவிட் பயிற்சியாளராக வந்தால், அது மேலும் பலத்தை கொடுக்கும்.ராகுல் டிராவிட் தனக்கு வேலை கொடுங்கள் என்று கிண்டலுக்கு சொன்னாலும் சொன்னார், அவருக்கு தற்போது கோடிக்கணக்கில் சம்பளம் கொடுக்க ஒவ்வொரு ஐபிஎல் அணிகளும் தீவிரம் காட்டி வருகின்றது.