“அவருக்கு தான் முதல் வாய்ப்பு”..பும்ராவுக்கான மாற்று வீரர் யார்??..ராகுல் டிராவிட் வெளிப்படை பேச்சு!
மும்பை: இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு மாற்று வீரர் யார் என்பது குறித்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மனம் திறந்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 16ம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது.
இந்த தொடருக்கான இந்திய அணி இன்று அதிகாலை மும்பையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டனர்.

பும்ராவின் காயம்
15 பேர் கொண்ட அணியில் இருந்து வெறும் 14 வீரர்கள் மட்டுமே ஆஸ்திரேலியாவுக்கு சென்றனர். வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக விலகியதால் அவரின் இடம் காலியாகவே உள்ளது. பும்ராவுக்கு மாற்று வீரரை தேர்வு செய்யும் பணிகள் தான் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதில் முகமது ஷமி, முகமது சிராஜ் மற்றும் தீபக் சஹார் ஆகியோர் போட்டியிட்டு வருகின்றனர்.

டிராவிட் பேச்சு
இந்நிலையில் மாற்று வீரர் யார் என்பது குறித்து ராகுல் டிராவிட் பேசியுள்ளார். அதில், பும்ரா போன்ற சிறந்த வீரர் இல்லாதது இந்தியாவுக்கு பெரும் இழப்பு. எதிர்பாராத விதமாக அவரால் வரமுடியவில்லை. எனினும் அவரின் இடத்தை நிரப்புவதற்கு மற்ற வீரர்களுக்கு இது சரியான நேரம் ஆகும். அதனை செய்தால் அவர்களுக்கான வாய்ப்பு அதிகரிக்கும்.

அதுதான் நல்ல முடிவு
பும்ராவுக்கு மாற்றாக முகமது ஷமியை தான் ஒரே தேர்வாக வைத்திருந்தோம். ஆனால் அவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். எனினும் அக்டோபர் 15ம் தேதி வரை கால அவகாசம் உள்ளது. தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ள அவர், குணமடைந்துவிட்டால், மீண்டும் அணிக்குள் வருவது நல்ல முடிவாக இருக்கும்.

இறுதிகட்ட முடிவு
ஷமியின் உடல்நிலை குறித்தும், கொரோனா பாதிப்பு குறித்தும் தொடர்ச்சியாக கேட்டறிந்து வருகிறேன். அவரின் இறுதி ரிப்போர்ட் கிடைத்தவுடன் அதிகாரப்பூர்வ முடிவு எடுக்கப்படும் என டிராவிட் கூறியுள்ளார். முகமது ஷமி கடந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் ஒரு சர்வதேச டி20 போட்டியில் கூட விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications