'பெருஞ்சுவர்' டிராவிட்டையே இரக்கமின்றி கொடுமைப்படுத்திய பவுலர் யார் தெரியுமா?
டெல்லி: எதிரணி பவுலர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய இந்திய அணியின் பெருஞ்சுவர் என வர்ணிக்கப்படும் ராகுல் டிராவிட், தனக்கு அச்சுறுத்தலாக இருந்த வேகப்பந்து வீச்சாளர் யார் என்பதை தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில், ராகுல் டிராவிட் களத்தில் நின்றால் அது எதிரணி பவுலர்களுக்கு மனதளவில் பலவீனத்தை கொடுத்துவிடும். இவர் எப்படியும் இன்னும் பல மணி நேரம் நிற்கத்தான் போகிறார், என்னத்த, பந்து போட்டு, என்னத்த... என்று என்னத்த கண்ணையா போல புலம்பிய பவுலர்கள்தான் ஏராளம்.
ஆனால் இப்படிப்பட்ட ராகுல் டிராவிட்டையே ஒரு பவுலர் மிரட்டி வைத்திருந்தார். அதை டிராவிட்டே தனது வாயால் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா
டிராவிட் வார்த்தைகளில் இருந்து.. "நன் விளையாடிய காலகட்டத்தில் ஆஸ்திரேலியா அசைக்க முடியாத அணியாக இருந்தது. அதிலும், அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் கிளன் மெக்ராத் மிகப்பெரிய பவுலராகும்.

மெக்ராத்
எனது கிரிக்கெட் வாழ்க்கையில், ஆப்ஸ்டம்ப்பு பகுதியில், தொடர்ச்சியாக மிகச்சிறப்பாக பந்து வீசிய பவுலர் என்றால் அது மெக்ராத்தான். தொடர்ந்து ஒரே இடத்தில் பந்தை பிட்ச் செய்ய அவரால் முடியும். ஆப் ஸ்டம்பு பகுதியில் பந்தை பிட்ச் செய்து அவுட்-ஸ்விங், இன்-ஸ்விங், பவுன்ஸ் என பல வகையாக வீசி பேட்ஸ்மேன்களை குழப்பத்திலேயே வைத்திருப்பார்.

எல்லா பந்துமே கஷ்டம்
மெக்ராத் வீசும் எந்த ஒரு பந்தையும் பேட்ஸ்மேன்கள் ஈசியாக எதிர்கொள்ள முடியாது. எல்லா பந்துகளுமே விக்கெட்டை வீழ்த்தும் திட்டத்தோடே வீசப்படும். அவரது பந்து வீச்சில், விக்கெட்டை காப்பாற்றிக்கொண்டு ரன்னையும் சேர்ப்பதற்குள் போதும், போதும் என்றாகிவிடும்.

இரக்கமில்லா பவுலர்
காலையில் வீசும் முதல் ஓவரின்போதும், மாலையில் பந்து வீசும்போதும் ஒரே மாதிரியான வேகத்தில், துல்லியமாக பந்து வீசும் திறமை கொண்டவர் மெக்ராத். அவரிடம் பேட்ஸ்மேன்கள் இரக்கமே எதிர்பார்க்க முடியாது. இரக்கமில்லாத பவுலர் அவர். இவ்வாறு டிராவிட் புகழாரம் சூட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications