
இரு மகன்கள்
ராகுல் டிராவிட்டிற்கு சமித் மற்றும் அன்வே என்ற இரு மகன்கள் உள்ளனர். இதில் மூத்தமகன் சமித்திற்கு தற்போது 9 வயதாகிறது. பெங்களூரிலுள்ள மல்யா ஆதிதி இன்டர்நேஷனல் பள்ளியில் படித்து வருகிறார். அப்பள்ளிக்கான கிரிக்கெட் அணியிலும் சமித் இடம் பெற்றுள்ளார்.

கிரிக்கெட் தொடர்
தற்போது பெங்களூரில் பள்ளிகளுக்கு இடையேயான கோபாலன் கிரிக்கெட் சேலஞ்ச் கப் 2015 என்ற கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. 12 வயதுக்குட்பட்ட மற்றும் 14 வயதுக்குட்பட்ட மாணவர்களை கொண்டு இரு பிரிவுகளாக இத்தொடர் நடைபெற்றுவருகிறது. 23 அணிகள் பங்கேற்கின்றன.

சமித் அணி
ஆகஸ்ட் 31ம் தேதி தொடங்கிய இத்தொடர், செப்டம்பர் 5ம் தேதிவரை நடைபெறும். இதில் கோரமங்களா செயின்ட் ஜான்ஸ் மெடிக்கல் கல்லூரி மைதானத்தில் நடந்த லீக் போட்டியில், மல்யா பள்ளியும், நியூ ஹாரிசான் பப்ளிக் ஸ்கூல் பள்ளியும் மோதின. முதலில் பேட் செய்த மல்யா அணி நிர்ணயிக்கப்பட்ட 16 ஓவர்களில் 210 ரன்களை குவித்தது.

சமித் அரை சதம்
மல்யா பள்ளியின் பேட்ஸ்மேன் சமித் 77 ரன்கள் குவித்து நாட்-அவுட்டாக நின்றார். 2வதாக பேட் செய்த ஹாரிசான் பள்ளியால் 16 ஓவர்களில் 96 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்ததால், மல்யா பள்ளி 114 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது.

பயிற்சிகள்
டிராவிட்டின் மகன் சமித், தனது தந்தையுடன் இந்திய ஏ அணிக்கான பயிற்சி ஆட்டங்கள், ராஜஸ்தான் அணிக்கான பயிற்சிகளின்போது பங்கேற்று பயிற்சி எடுத்துக்கொண்டவர். தொடர்ந்து தனது தந்தையின் வழிகாட்டுதல்படி கிரிக்கெட்டில் அசத்த தொடங்கியுள்ளார்.

சச்சின் மகன்
ஆஷஸ் தொடரில் பங்கேற்ற அணி வீரர்களுக்கு சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் பந்து வீசி பயிற்சி எடுத்து அசத்தியிருந்தார். தற்போது டிராவிட்டின் மகன் பேட்டிங்கில் கலக்கியுள்ளார். ஜாம்பவான்களின் வாரிசுகளும் நாளைய இந்திய கிரிக்கெட்டில் கால் பதித்து அசத்துவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக தெரிகின்றன.


Click it and Unblock the Notifications











