டெண்டுல்கர் ஓய்வு பெறுவது இளம் வீரர்களுக்கு இழப்பு- டிராவிட் கருத்து
டெல்லி: கிரிக்கெட்டில் இருந்து டெண்டுல்கர் ஓய்வு பெறுவது இளம் வீரர்களுக்கு இழப்பாக இருக்கும் என்று முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டிராவிட் கூறுகையில், இந்திய அணியில் இடம் பிடித்ததில் டெண்டுல்கரை விட நான் 7 ஆண்டுகள் ஜூனியர். ஓய்வு அறையில் டெண்டுல்கருக்கு அடுத்து தங்களது கிட் பேக்கை வைப்பது பெரிய விஷயமாகும்.
இது வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கக்கூடியதாகும். டெண்டுல்கரை ஓய்வு அறையில் பார்ப்பதை அடுத்த தலைமுறை வீரர்கள் இழக்கின்றனர்.

சாதனை வரலாறு
இது அவர்களுக்கு பெரும் இழப்பாகும். டெண்டுல்கர் ஓய்வு அறையில் இல்லாவிட்டாலும் அவர் விட்டுச் செல்லும் சாதனை வரலாறு நீண்ட நாட்கள் நிலைத்து நிற்கும். அது அடுத்த தலைமுறை வீரர்களுக்கும் தொடரும். சூப்பர் ஸ்டாராக டெண்டுல்கர் இருந்தாலும் அவரை எல்லோரும் எளிதில் அணுகமுடியும்.

கணிசமான பங்கு
இந்திய கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு அவர் கணிசமாக பங்களித்து இருக்கிறார். அவரின் நீண்ட கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வரும் தருணம் இது என்பது எனக்கு தெரியும் என்றார்.

மத்திய அமைச்சர்
மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் வெளியிட்டுள்ள கருத்தில், சச்சின் டெண்டுல்கர் அசாதாரணமான விளையாட்டு வீரர். ஓய்வு பெற்றாலும் அவர் விளையாட்டு வீரர்கள் சாதிக்க உத்வேகம் அளிப்பவராக இருப்பார். டெண்டுல்கருடன் இணைந்து நமது நாட்டு விளையாட்டு வளர்ச்சியில் ஈடுபட மத்திய விளையாட்டு அமைச்சகம் ஆர்வமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

இங்கிலாந்து ஏடுகள் புகழாரம்
இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் முன்னணி பத்திரிகைகள் அனைத்து டெண்டுல்கரை வெகுவாக புகழ்ந்து செய்தி வெளியிட்டுள்ளன. அவரை சூப்பர் ஹீரோ என்றும், கால்பந்து ஜாம்பவான் பீலே, பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் ஆகியோருடன் ஒப்பிட்டும் கட்டுரை தீட்டி இருக்கின்றன.

ஆஸி. ஊடகங்கள்
ஆஸ்திரேலியாவின் முன்னணி பத்திரிகைகள், கிரிக்கெட்டின் கடவுள் என்றும், இந்த காலத்தின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்கள் என்று பாராட்டி செய்திகள் வெளியிட்டுள்ளன.


Click it and Unblock the Notifications