Recommended Video
துவக்க ஜோடி
இந்தியா - தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடரின் முதல் போட்டி கொச்சியில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் துவக்க வீரர்கள் ஹெர்ஷல் கிப்ஸ் மற்றும் கேரி கிர்ஸ்டன் விக்கெட் விழாமல் ஆடினர்.
இந்தியா திணறல்
அந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் ஒரு விக்கெட்டையும் வீழ்த்த முடியாமல், ரன் குவிப்பையும் கட்டுப்படுத்த முடியாமல் இந்திய அணி திணறியது. அஜித் அகர்கர், திருநாவுக்கரசு குமரன் என இரண்டு வேகப் பந்துவீச்சாளர்களும் ரன்களை வாரி இறைத்தனர்.
பந்து வீசிய சச்சின்
சுழற் பந்துவீச்சாளர் அனில் கும்ப்ளே பந்துவீச்சையும் எளிதாக அணுகியது கிப்ஸ் - கிர்ஸ்டன் ஜோடி. மற்றொரு சுழற் பந்துவீச்சாளர் சுனில் ஜோஷி ஓரளவு கட்டுப்பாடாக வீசி வந்தார். அப்போது பகுதி நேர பந்துவீச்சாளரான சச்சின் கையில் பந்தை கொடுத்தார் கேப்டன் கங்குலி.
கங்குலியின் அதிரடி முடிவு
சச்சின் பந்துவீச்சில் ரன் எடுக்க கிப்ஸ் - கிர்ஸ்டன் திணறினர். அடுத்து எதிர்பாராத வகையில் ராகுல் டிராவிட்டை பந்து வீச அழைத்தார் கங்குலி. அப்போது கங்குலியும் பகுதி நேர பந்துவீச்சாளர் தான். எனினும், அவர் மித வேகத்தில் வீசுவார். எனவர், சுழற் பந்துவீச்சாளர் தான் வேண்டும் என்ற முடிவில் டிராவிட்டை அழைத்தார்.
அனுபவம் இல்லை
டிராவிட் உள்ளூர் போட்டிகளில் கூட அதிக அளவில் பந்து வீசியதில்லை. அனுபவம் மற்றும் பயிற்சி இல்லாவிட்டாலும் ஆஃப்-ஸ்பின் வீசும் டிராவிட்டை நம்பினார் கங்குலி. அவரது திட்டம் ஓரளவு வேலை செய்தது. டிராவிட் அன்று சிறப்பாகவே பந்து வீசினார்.
235 ரன்கள் குவித்த ஜோடி
சச்சின் - டிராவிட் கூட்டாக குறைந்த அளவில் ரன் கொடுத்து பந்து வீசி வந்தனர். 39 ஓவர்கள் வரை விக்கெட் விழாமல் ஆடிய அந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 235 ரன்கள் சேர்த்தது. ஹெர்ஷல் கிப்ஸ் 111 ரன்கள் அடித்த நிலையில் சுனில் ஜோஷி பந்துவீச்சில் 40வது ஓவரில் ஆட்டமிழந்தார்.
முதல் விக்கெட் வீழ்ந்தது
அதன் பின்னர் தென்னாப்பிரிக்க அணி கடைசி 10 ஓவர்களில் அதிரடியாக ரன் குவிக்க முயற்சி செய்தது. அப்போது 43வது ஓவரை வீசினார் டிராவிட். அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் கேரி கிர்ஸ்டன் கேட்ச் கொடுத்து 115 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ஒரே ஓவரில் 2 விக்கெட்
அடுத்து அதிரடி ஆல்-ரவுண்டர் லான்ஸ் க்ளுஸ்னர் களமிறங்கினார். அவர் டிராவிட் ஓவரில் மூன்று பந்துகளில் ரன் குவிக்க முடியாத நிலையில், பொறுமை இழந்து அந்த ஓவரின் கடைசி பந்தை நேராக அடித்தார். பந்து டிராவிட் கைகளில் தஞ்சம் அடைந்தது.
குறைந்த அளவில் ரன் கொடுத்தனர்
ஒரே ஓவரில் 2 விக்கெட் வீழ்த்தி அசத்தினார் டிராவிட். சச்சின் 10 ஓவர்களில் 44 ரன்களும், டிராவிட் 9 ஓவர்களில் 43 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டும் வீழ்த்தி இருந்தார். இவர்கள் இருவர் மட்டுமே அன்று ஓவருக்கு 5 ரன்களுக்கும் குறைவாக ரன் கொடுத்த இந்திய பந்துவீச்சாளர்கள்.
இந்தியா வெற்றி
தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 301 ரன்கள் குவித்தது. பின்னர் இந்திய அணியில் அஜய் ஜடேஜா 92, முகமது அசாருதீன் 42, ராபின் சிங் 42 ரன்கள் குவிக்க இந்திய அணி கடைசி ஓவரில் வெற்றி பெற்றது. அன்று கேப்டன் கங்குலி எடுத்த அதிரடி முடிவால் தென்னாப்பிரிக்க அணியின் ரன் குவிப்பு ஓரளவு தடுக்கப்பட்டது. டிராவிட் தன் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தார். இந்திய அணியும் வென்றது.