டெஸ்ட் அணி மாற்றம்
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ராகுல் நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக துவக்க வீரராக ரோஹித் சர்மா களமிறங்குவார் என அறிவிக்கப்பட்டது.
ராகுல் சொதப்பல்
ராகுல் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் மோசமான முறையில் தொடர்ந்து ஆட்டமிழந்து வந்ததே அவரது நீக்கத்துக்கு காரணம் என கூறப்பட்டது. அதனால், அவர் உள்ளூர் போட்டிகளில் ஆடி தன்னை நிரூபிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.
ரோஹித் வாய்ப்பு
அவருக்கு பதிலாக வாய்ப்பு பெற்ற ரோஹித் சர்மா, டெஸ்ட் அணியில் நீண்ட காலமாக சரியான, தொடர்ந்த வாய்ப்பு இன்றி தவித்து வருகிறார். அவருக்கு முதன் முறையாக டெஸ்ட் அணியில் துவக்க வீரர் வாய்ப்பு கிடைத்தது.
எதிர்பார்ப்பு
ரோஹித் சர்மா ஒருநாள் மற்றும் டி20 அணியில் உலகின் முன்னணி வீரர் என்பதால், அவர் டெஸ்ட் போட்டிகளிலும் துவக்க வீரராக இறங்க இருக்கும் தகவல் ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.
ரோஹித் டக் அவுட்
டெஸ்ட் தொடருக்கு முன் நடைபெற்ற பயிற்சிப் போட்டியில் ரோஹித் சர்மா துவக்க வீரராக இறங்கினார். அதில் ரன் குவிப்பார் என எதிர்பார்த்த நிலையில், டக் அவுட் ஆகி பெரும் அதிர்ச்சி அளித்தார்.
ராகுல் சதம்
மறுபுறம், ராகுல் கர்நாடகா அணிக்காக விஜய் ஹசாரே தொடரில் ஆடி சதம் அடித்தார். கேரளா அணிக்கு எதிரான போட்டியில் 122 பந்துகளில் 131 ரன்கள் குவித்து, தன் அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.
ஒரே நாளில் நடந்தது
ரோஹித் சர்மா டக் அவுட் மற்றும் ராகுல் அடித்த சதம் இரண்டும் ஒரே நாளில் சில மணி நேர வித்தியாசத்தில் நடைபெற்றது. இதை விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் சிலர் சுவாரசியமான முரணாக பேசி வருகின்றனர்.
ரோஹித்துக்கு சிக்கலா?
ரோஹித் சர்மா பயிற்சிப் போட்டியில் டக் அவுட் அனாலும் அவருக்கு இப்போதைக்கு சிக்கல் இல்லை என்றே கூறப்படுகிறது. தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் திட்டமிட்டபடி ரோஹித் தான் துவக்க வீரராக களமிறங்குவார்.
டெஸ்ட் தொடர் துவக்கம்
தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகள் உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி வரும் அக்டோபர் 2 அன்று விசாகப்பட்டினம் மைதானத்தில் துவங்க உள்ளது.