ஜமைக்கா: மேற்கிந்திய தீவுகள் அணியை எளிதில் வீழ்த்தும் வாய்ப்பு 2வது டெஸ்டில் கிடைத்தும் மழையால் அதை இந்தியா தவற விட்டுவிடுமோ என்ற பதற்றம் ரசிகர்களை தொற்றிக்கொண்டுள்ளது.
ஆன்டிகுவாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், ஜமைக்கா, சபினா பார்க் மைதானத்தில் 2வது டெஸ்ட் தொடங்கியது.

முதலில் பேட் செய்த மேற்கிந்திய தீவுகள் அணியை அஸ்வினின் 5 விக்கெட்டுகள் உதவியோடு 196 ரன்களுக்குள் மடக்கியது இந்தியா. இரண்டாவது பேட் செய்த இந்திய அணி, ராகுல், ரஹானே ஆகியோர் சதத்தால் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 500 ரன்கள் குவித்தபோது, டிக்ளேர் செய்தது.
304 ரன்கள் பின்தங்கியுள்ள நிலையில், 4வது நாள் ஆட்டம் இன்று நடைபெற வேண்டிய நிலையில் நேற்று டீ இடைவேளையின்போது பெய்த மழை அதன்பிறகு வெறிக்கவேயில்லை. எனவே வெஸ்ட் இண்டீஸ் 2வது இன்னிங்சில் பேட்டிங்கை தொடங்கவில்லை.
ஜமைக்கா பகுதியில் புயல் சின்னம் உருவாகியுள்ளதாக வானிலை இலாகா அறிவித்துள்ளது. எனவே எளிதாக கிடைத்துள்ள இந்த வெற்றி வாய்ப்பு அடுத்த இரு நாள் மழையால் கெட்டுப்போக வாய்ப்புள்ளது.
மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகளிலும் வென்று வெள்ளையடிப்போம் என்ற இந்திய வீரர்களின் சபதம் என்னவாகுமோ, வருண பகவான் கையில்தான் முடிவு உள்ளது.