லக்னோ: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 15.2 ஓவர்களில் 94 ரன்கள் எடுத்து விளையாடி வந்த நிலையில், திடீரென மழை பெய்ததால் ஆட்டம் தடைபட்டுள்ளது.
ஐபிஎல் தொடரின் 43வது லீக் போட்டியில் வலிமையான லக்னோ அணியை எதிர்த்து பெங்களூரு அணி விளையாடி வருகிறது. கடந்த முறை இந்த இரு அணிகள் சின்னசாமி மைதானத்தில் விளையாடிய போது, கடைசி பந்தில் லக்னோ அணி த்ரில் வெற்றியை பெற்றது. இந்த நிலையில் இன்றையப் போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் டூ பிளஸிஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து டூ பிளஸிஸ் - விராட் கோலி இணை தொடக்க வீரர்களாக களமிறங்கி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் 6 ஓவர்களில் ஆர்சிபி அணி விக்கெட் இழப்பின்றி 42 ரன்களை எடுத்தது. ஆனால் ரவி பிஷ்னாயின் சுழலில் சிக்கி விராட் கோலி 31 ரன்களிலும், அனுஜ் ராவத் 9 ரன்களிலும், மேக்ஸ்வெல் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து இளம் வீரர் சுயஷ் பிரபுதேசாய் 6 ரன்களிலும் ஆட்டமிழக்க, ஆர்சிபி அணி 90 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்து தடுமாறியது.
இதனையடுத்து கேப்டன் டூ பிளஸிஸ் - தினேஷ் கார்த்திக் இணை களத்தில் இருந்தனர். 15.2 ஓவர்களில் ஆர்சிபி அணி 93 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், திடீரென மழை குறுக்கிட்டது. இதனால் வீரர்கள் அனைவரும் ஓய்வறை நோக்கி வேகமாக நடையை கட்டினார். இன்று காலை முதலே லக்னோவில் மழை பெய்து வருவதால் மீண்டும் ஆட்டம் தொடங்குமா என்ற ரசிகர்கள் இடையே சந்தேகம் ஏற்பட்டது. இந்த நிலையில் ஆட்டம் மீண்டும் 9.15 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.