சென்னை: சென்னை அணிக்கு எதிராக போட்டியில் ராஜஸ்தான் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் போல்ட்-க்கு காயம் காரணமாக ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இதனால் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சிஎஸ்கே ரசிகர்கள் நிம்மதியில் உள்ளனர்.
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்துகிறது. இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். சென்னை அணியில் நட்சத்திர ஸ்பின்னர் சான்ட்னர் மற்றும் ப்ரிடோரியஸ் ஆகியோர் நீக்கப்பட்டு தீக்சனா மற்றும் மொயின் அலி இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் டெத் ஓவரில் மகாளாவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல் ராஜஸ்தான் அணி சார்பாக நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் போல்ட் ஓய்வில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை அணியின் ரசிகர்களும், ருதுராஜ் கெய்க்வாட்-ம் நிம்மதியடைந்துள்ளனர். ஏனென்றால் 4 போட்டிகளில் விளையாடியுள்ள போல்ட், 3 முறை விக்கெட் வீழ்த்தியுள்ளார். அதேபோல் போல்ட் பந்துவீச்சில் 24 பந்துகளை எதிர்கொண்டுள்ள ருதுராஜ், 17 டாட் பால்களை விளையாடியுள்ளார். இதனால் ருதுராஜிற்கு அச்சுறுத்தல் இல்லை என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நடப்பு ஐபிஎல் தொடரில் 3 போட்டிகளில் போல்ட் முதல் ஓவரை வீசியுள்ளார். அதில் இருமுறை முதல் ஓவரிலேயே இரு விக்கெட்டுகளை வீழ்த்தி எதிரணிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளார். இதனால் போல்ட் பந்துவீச்சை ருதுரஜ் கெய்க்வாட் எப்படி எதிர்கொள்ள போகிறார் என்ற கவலை ரசிகர்கள் மத்தியில் இருந்தது. தற்போது போல்ட் அணியில் இல்லாததால், சென்னை ரசிகர்கள் நிம்மதியில் உள்ளனர்.