பெங்களூரு : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஆர்சிபி அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் சுருண்டு தோல்வியை தழுவியது. இதன் மூலம் ராஜஸ்தான் அணியில் ரன் ரேட் அடி பாதளத்திற்கு சென்றது. இந்த வெற்றியின் மூலம் 7வது இடத்தில் ஆர்சிபி இன்று 5வது இடத்திற்கு முன்னேறியது.
ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்த ஆடடத்தில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து, விராட் கோலி 18 ரன்களில் ஆட்டமிழக்க, டுபிளசிஸ், மேக்ஸ்வெல ஆகியோர் ஜோடி அதிரடியாக விளையாடினர்.

இருவரும் அடுத்தடுத்து அரைசதம் அடித்து முக்கிய கட்டத்தில் வெளியேறினர். இதனையடுத்து வழக்கம் போல், ஆர்சிபி அணியின் மற்ற வீரர்கள் சொதப்பினர். குறிப்பாக தினேஷ் கார்த்திக் டக் அவுட் ஆனார். இறுதியில் அனுஜ் ராவத் 29 ரன்கள் எடுக்க, ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது.
172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சிக்கரமாக அமைந்தது. ஆர்ஆர் பேட்டிங் வரிசையில் பூகம்பம் ஏற்பட்டது போல் விக்கெட்டுகள் சரிந்தன. ஜெய்ஷ்வால் மற்றும் பட்லர் ஆகியோர் டக் அவுட்டாக ராஜஸ்தானுக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது.

இதனையடுத்து சஞ்சு சாம்சன் 4 ரன்களில் ஆட்டமிழக்க, ஜோ ரூட் 10 ரன்களில் வெளியேறினார். இதனால் இம்பேக்ட் வீரராக வந்த படிக்கல் 4 ரன்களிலும், அதிரடி வீரர் துருவ ஜூரல் 1 ரன்னிலும், அஸ்வின் டக் அவுட்டாகியும் விக்கெட்டுகள் அடுத்தடுத்து வீழ்ந்தன.
ஷிம்ரன் ஹேட்மயர் மட்டும் தனி ஆளாக போராடி 19 பந்துகளில் 4 சிக்சர் அடித்து 35 ரன்கள் சேர்த்து வெளியேற, ராஜஸ்தான் அணி 59 ரன்களில் சுருண்டது. இதனால் 10.3வது ஓவரிலேயே பெங்களூரு அணி வெற்றி பெற்றது. இது ஐபிஎல் வரலாற்றிலேயே 3வது குறைந்தபட்ச ஸ்கோராகும். இதன் மூலம் ராஜஸ்தான் இனி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டும் என்றால் மற்றவர்களின் தயவு தேவைப்படும்.