ஐதராபாத்: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் 28 பந்துகளில் அரைசதம் விளாசி மிரட்டியுள்ளார்.
16வது ஐபிஎல் சீசனின் 3வது நாளின் முதல் போட்டியில் ஐதராபாத் - ராஜஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. கேப்டன் மார்க்ரம் இன்னும் அணியுடன் இணையாததால், இந்தப் போட்டிக்கு புவனேஷ்வர் குமார் தலைமையேற்றுள்ளார்.
இந்த நிலையில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி கேப்டன் புவனேஷ்வர் குமார் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக பட்லர் - ஜெய்ஸ்வால் இணை களமிறங்கியது.

தொடக்க முதலே இருவரும் அதிரடியாக விளையாட 3 ஓவர்களில் ராஜஸ்தான் அணியின் ஸ்கோர் 37ஆக இருந்தது. இதன்பின்னர் வாஷிங்டன் சுந்தர் வீசிய 4வது ஓவரில் 19 ரன்களும், நடராஜன் வீசிய 5வது ஓவரில் 17 ரன்கள் விளாசினர். தொடர்ந்து 20 பந்துகளில் ஜோஸ் பட்லர் அரைசதம் அடித்தார். பின்னர் பட்லர் 54 ரன்களில் ஆட்டமிழக்க, கேப்டன் சஞ்சு சாம்சன் களமிறங்கினார்.
சஞ்சு சாம்சனும் வந்த முதல் பந்து முதலே பவுண்டரியும், சிக்சருமாய் விளாசினார். அதேபோல் மற்றொரு தொடக்க வீரரான ஜெய்ஸ்வாலும் அரைசதம் அடித்து ஆட்டமிழக்க, ராஜஸ்தான் ஸ்கோரை உயர்த்தும் பொறுப்பு சஞ்சு சாம்சன் தலைமையில் விழுந்தது. இந்த சூழலில் ஒவ்வொரு ஓவரிலும் சிக்சர் மற்றும் பவுண்டரியை சஞ்சு சாம்சன் விளாசி தள்ளினார்.
இதன் காரணமாக சஞ்சு சாம்சன் 28 பந்துகளில் அரைசதம் கடந்தார். அண்மை காலமாக இந்திய அணியில் சஞ்சு சாம்சன் புறக்கணிக்கப்படுவதாக ரசிகர்கள் விமர்சித்து வந்தனர். இந்த சூழலில் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியிலேயே சஞ்சு சாம்சன் அரைசதம் விளாசி ஃபார்மில் இருப்பது அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.