கவுகாத்தி: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.
16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அசாம் மாநிலத்தின் கவுகாத்தியில் இன்று தொடங்கியுள்ள 8வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல் அணியை எதிர்த்து பஞ்சாப் கிங்ஸ் அணி விளையாடி வருகிறது. அசாம் மாநிலத்தை மையமாக வைத்து ஐபிஎல் அணி இல்லையென்றாலும், இது ராஜஸ்தான் அணிக்கான உள்ளூர் ஆட்டமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரியான் பராக்கிற்கு உள்ளூர் ரசிகர்கள் அதிகளவில் ஆதரவு அளித்துள்ளனர்.

அதேபோல் முதல்முறையாக அசாம் மாநிலத்தின் கவுகாத்தியில் ஐபிஎல் போட்டி நடப்பதால், கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமாக மைதானத்திற்கு அதிகளவில் வந்துள்ளனர். இந்த நிலையில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ஆடிய அதே அணியுடன் ராஜஸ்தான் அணி மீண்டும் களமிறங்கியுள்ளது. தொடர்ந்து சஞ்சு சாம்சன் பேசுகையில், நிச்சயம் பனிப்பொழிவு இருக்கும்.
கடந்த மாதமே இந்த மைதானத்தில் ராஜஸ்தான் அணியின் இளம் வீரர்களுடன் ஒரு வாரம் பயிற்சி முகாம் நடைபெற்றது. அதற்கு தற்போது உதவியாக இருக்கிறது. அதேபோல் ஜெய்ஸ்வால், ரியான் பராக் உள்ளிட்டோர் ராஜஸ்தான் அணியின் அங்கமாக 4 ஆண்டுகளுக்கு மேலாக விளங்கி வருகிறார்கள். தற்போது அனுபவ வீரர்களுடன் இணைந்து வேகமாக கற்று முன்னேறி வருகிறார்கள் என்று தெரிவித்தார்.
ராஜஸ்தான் அணி விவரம்: ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன், படிக்கல், ரியான் பராக், ஹெட்மயர், ஜேசன் ஹோல்டர், அஸ்வின், போல்ட், ஆசிஃப், சாஹல்
பஞ்சாப் அணி விவரம்: ஷிகர் தவான், பிரப்சிம்ரன் சிங், பனுகா ராஜபக்சே, ஜித்தேஷ் சர்மா, ஷாரூக் கான், சிக்கந்தர் ராசா, நாதன் எல்லீஸ், ஹர்ப்ரீத் பரார், ராகுல் சஹர், அர்ஷ்தீப் சிங்