ஜெய்ப்பூர்: பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 28 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
ஐபிஎல் தொடரின் 60வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியை எதிர்த்து பெங்களுரு அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி டூ பிளஸிஸ், மேக்ஸ்வெல் மற்றும் அனுஜ் ராவத்தின் அபாரமான ஆட்டத்தால் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்கள் சேர்த்துள்ளது.

ஜெய்ப்பூர் மைதானம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்றாலும், ஆர்சிபி பவுலிங் அட்டாக்கால் ராஜஸ்தான் அணிக்கு வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்பட்டது. ஏனென்றால் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 200 ரன்களை வெறும் 16 ஓவர்களில் விட்டுக் கொடுத்திருந்தது. ஆனால் ஆர்சிபி அணியின் சிராஜ் வீசிய முதல் ஓவரிலேயே ஜெய்ஸ்வாலை டக் அவுட்டில் வீழ்த்தி மிரட்டிவிட்டார்.
இதனைத் தொடர்ந்து பார்னல் வீசிய இரண்டாவது ஓவரில் பட்லரும் டக் அவுட்டாக, அவரைத் தொடர்ந்து அதே ஓவரில் சஞ்சு சாம்சனும் 4 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன் காரணமாக ராஜஸ்தான் அணி ஸ்கோர் 7 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த நிலையில் நிதானமாக ஆடும் படிக்கல் - ஜோ ரூட் இணை களத்தில் இருந்தது. இதனால் சிறிது நேரம் விக்கெட் கொடுக்காமல் தடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் பிரேஸ்வெல் வீசிய ஓவரில் படிக்கல் 4 ரன்களிலும், பார்னல் பந்துவீச்சில் ஜோ ரூட் 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் 5.3 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 28 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. பவர் பிளே ஓவர்களுக்குள்ளாகவே ராஜஸ்தான் அணியின் முக்கியமான பேட்ஸ்மேன்களை வீழ்த்தியதால், ஆர்சிபி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.