ஐதராபாத்: ராஜஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் ஜோஸ் பட்லர் 20 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார். ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள் வீசிய பந்துகளை மைதானத்தின் நாலாப் பக்கமும் விளாசியதால், ராஜஸ்தான் அணி பவர் பிளே ஓவர்களிலேயே 85 ரன்கள் சேர்த்தது.
16வது ஐபிஎல் சீசனின் 3வது நாளின் முதல் போட்டியில் ஐதராபாத் - ராஜஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றனர். கேப்டன் மார்க்ரம் இன்னும் அணியுடன் இணையாததால், இந்தப் போட்டிக்கு புவனேஷ்வர் குமார் தலைமையேற்றுள்ளார்.

இந்த நிலையில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி கேப்டன் புவனேஷ்வர் குமார் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். ஐதராபாத் அணிக்காக மயங்க் அகர்வால், ஹாரி ப்ரூக்ஸ், கிளென் பிலிப்ஸ் மற்றும் அடில் ரஷீத் ஆகியோர் அறிமுகமாகினர்.
அதேபோல் ராஜஸ்தான் அணி தரப்பில் ஜேசன் ஹோல்டர் மற்றும் கேஎம் ஆசிஃப் ஆகியோர் அறிமுகமாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து ராஜஸ்தான் அணிக்காக ஜெய்ஸ்வால் - பட்லர் கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் பந்திலேயே ஜெய்ஸ்வால் டவுன் தி டிராக் வந்து அடிக்க முயன்றார். ஆனால் அது பேடில் பட்டு விக்கெட் கீப்பரிடம் சென்றது. அதன்பின்னர் ஒவ்வொரு ஓவரிலும் பவுண்டரி, சிக்சர் என்று விளாச ராஜஸ்தான் அணி மூன்றே ஓவர்களில் 37 ரன்கள் குவித்தது.
அதன்பின்னர் புவனேஷ்வர் குமார், ரன்ரேட்டை கட்டுப்படுத்த வாஷிங்டன் சுந்தரை அழைத்து வந்தார். பவர்பிளே ஓவர்களில் வாஷிங்டன் சுந்தரும் சிறப்பாக வீசுவார் என்பதால், ரன் ரேட்டை கட்டுப்படுத்துவார் என்று பார்க்கப்பட்டது. ஆனால் வாஷிங்டன் சுந்தர் வீசிய முதல் பந்திலேயே பட்லர் சிக்சர் விளாச, மீண்டும் 2வது பந்திலும் சிக்சர் சென்றது. தொடர்ந்து அந்த ஓவரில் மொத்தமாக 19 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதனால் ராஜஸ்தான் அணி 4 ஓவர்கள் முடிவில் 56 ரன்கள் சேர்த்தது. அதன்பின்னர் வேறு வழியின்றி நடராஜனிடம் பந்து ஒப்படைக்கப்பட்டது.
ஆனால் அந்த ஓவருக்காகவே காத்திருந்தது போல் பட்லர், ஹாட்ரிக் பவுண்டரி உட்பட 4 பவுண்டர்களை விளாசினர். இதனால் 5 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 73 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து 20 பந்துகளிலேயே பட்லர் அரைசதம் கடக்க, ஐதராபாத் பந்துவீச்சாளர்கள் என்ன செய்வதென புரியாமல் திணறினர். ஆனால் ஃபரூக்கி வீசிய பந்தில் பட்லர் 54 ரன்களில் போல்டாகி வெளியேறினார். இதனால் ராஜஸ்தான் அணி 6 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 85 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது.