ஐதராபாத்: டி20 கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை சுழற்பந்துவீச்சாளர் சாஹல் படைத்துள்ளார்.
16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் ஐதராபாத் - ராஜஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற ஐதராபாத் கேப்டன் புவனேஷ்வர் குமார் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 203 ரன்கள் குவித்துள்ளது. ராஜஸ்தான் அணியின் டாப் 3 பேட்ஸ்மேன்களான பட்லர் 54 ரன்களும், ஜெய்ஸ்வால் 54 ரன்களும், சஞ்சு சாம்சன் 55 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இதனைத் தொடர்ந்து ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தொடங்கியது. ஐதராபாத் அணி தரப்பில் அபிஷேக் சர்மா மற்றும் மயங்க் அகர்வால் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். போல்ட் வீசிய முதல் ஓவரில் அபிஷேக் சர்மா ரன் எடுக்காமல் வெளியேற, அதன்பின்னர் வந்த ராகுல் த்ரிபாதியும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
இதனைத் தொடர்ந்து ஐதராபாத் பேட்ஸ்மேன்கள் ரன்கள் சேர்க்க திணறிய நிலையில், ராஜஸ்தான் அணியின் முன்னணி சுழற்பந்துவீச்சாளரான சாஹல் அட்டாக்கில் கொண்டு வரப்பட்டார். அப்போது நிதானமான 21 பந்துகளில் 13 ரன்கள் சேர்த்து விளையாடி வந்த ஐதராபாத் அணியின் ஹாரி புரூக், சாஹல் பந்தில் போல்டாகி வெளியேறினார். இதன் மூலம் இந்திய பந்துவீச்சாளர்களில் டி20 கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை சாஹல் படைத்துள்ளார்.
டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தீவிரமாக கவனம் செலுத்தி வரும் சாஹல், வொய்ட் பால் கிரிக்கெட்டில் அசைக்க முடியாத சுழற்பந்துவீச்சாளராக வலம் வருகிறார். சர்வதேச அளவில் டி20 கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்களில் 16வது வீரராகவும், சுழற்பந்துவீச்சாளர்களில் 8வது வீரராகவும் சாஹல் இடம்பிடித்துள்ளார். இவருக்கு பின் ரவிச்சந்திரன் அஸ்வின் 288 விக்கெட்டுகளுடன் பட்டியலில் இருக்கிறார்.