கவுகாத்தி: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ஜோஸ் பட்லருக்கு பதிலாக ரவிச்சந்திரன் அஸ்வின் தொடக்க வீரராக களமிறங்கியுள்ளது ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநில கவுகாத்தியில் நடந்து வரும் ஐபிஎல் தொடரின் 8வது லீக் போட்டியில் ராஜஸ்தான் - பஞ்சாப் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணி ஷிகர் தவான் 86* மற்றும் பிரப்சிம்ரன் சிங்கின் 58 ரன்களால் 197 ரன்கள் குவித்தது. இதையடுத்து 198 ரன்கள் என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி இரண்டாவது பேட்டிங்கை தொடங்கியுள்ளது. 198 ரன்கள் இலக்கு என்பதால், ராஜஸ்தான் அணி பவர் பிளே ஓவர்களில் அதிக ரன்களை குவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் பட்லர் வெளுத்து வாங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ராஜஸ்தான் அணி முக்கிய மாற்றத்தை செய்துள்ளது. தொடக்க வீரர் பட்லருக்கு பதிலாக ரவிச்சந்திரன் அஸ்வின் தொடக்க வீரராக களமிறங்கியுள்ளார். ஃபீல்டிங்கின் போது விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக பட்லர் களமிறங்க சிறிது நேரம் எடுத்துக் கொண்டார். இதனால் அவருக்கு முன்னதாக அஸ்வின் களமிறக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.
தொடர்ந்து முதல் பந்திலேயே சிக்சர் அடித்து ஜெய்ஸ்வால் ரன் குவிப்பை தொடங்கினார். ஆனால் அர்ஷ்தீப் சிங் வீசிய பந்தில் 11 ரன்களில் ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனைத் தொடர்ந்து ஜோஸ் பட்லர் களமிறக்கப்பட்டார். இதனால் பட்லர் தாமதமாக களமிறக்கப்பட என்ன காரணம் என்ற கேள்வி எழுந்தது. பின்னர் தொடக்க வீரராக வந்த அஸ்வினும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் ராஜஸ்தான் அணி 26 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து திணறியது.