மும்பை: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்பட உள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில், அதைவிட குறைந்த விலைக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விற்பனைக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த அணியின் உரிமையாளர்கள் தாங்கள் நினைக்கும் தொகை கிடைத்தால் மொத்த அணியையும் விற்க உள்ளதாக கூறப்படுகிறது.
19 ஆவது ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 28 ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்தியா டி20 உலகக்கோப்பையை வென்ற உற்சாகத்தில் இருக்கும் நிலையில், இந்த சீசன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஒருபுறம் வீரர்கள் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், மறுபுறம் சில அணி உரிமையாளர்கள் தங்களது அணிகளை விற்கும் முடிவில் உள்ளனர். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியைப் பின்பற்றி, தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் தனது முழு உரிமத்தையும் விற்க முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆர்சிபி அணியின் உரிமை மாற்றம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ராஜஸ்தான் அணியை வாங்க ஆதித்யா பிர்லா குழுமம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றன. ஆரம்பத்தில் தங்களது பெரும்பான்மையான பங்குகளை மட்டும் விற்கத் திட்டமிட்டிருந்த ராஜஸ்தான் அணி நிர்வாகம், தற்போது சரியான விலை கிடைத்தால் அணியை முழுமையாக விற்கத் தயாராக உள்ளது. இந்த அணியின் மதிப்பு சுமார் 9000 முதல் 12000 கோடி ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, மனோஜ் படாலே 65 சதவீத பங்குகளையும், ரெட் பேட் கேபிட்டல் 15 சதவீத பங்குகளையும், லச்லான் முர்டோக் 13 சதவீத பங்குகளையும் வைத்துள்ளனர். முழுமையாக அணியை விற்க இந்த அனைத்து தரப்பினரின் ஒப்புதலும் தேவை என்பதால், இந்தச் செயல்முறைக்குச் சற்று கூடுதல் நேரம் ஆகலாம். புகழ்பெற்ற ரெய்ன் குரூப் இந்த விற்பனைப் பணிகளைக் கவனித்து வருகிறது. ஆதித்யா பிர்லா குழுமத்துடன் இணைந்து அமெரிக்க தொழிலதிபர் டேவிட் பிளிட்சர், கால் சோமானி மற்றும் வால்மார்ட் வாரிசு ராப் வால்டன், டைம்ஸ் ஆஃப் இந்தியா, கேப்ரி குளோபல் ஆகிய பணக்காரர்கள் மற்றும் நிறுவனங்கள் அணியை வாங்கப் போட்டியில் உள்ளனர்.
பெங்களூரு அணிக்கு மார்ச் 31 ஆம் தேதிக்குள் விற்பனையை முடிக்க வேண்டிய கட்டாயம் உள்ள நிலையில், ராஜஸ்தான் அணிக்கு அத்தகைய அவசரம் ஏதுமில்லை. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முறையான ஒப்புதல் கிடைத்த பின்னரே, 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இந்த உரிமை மாற்றம் முழுமையடையும். 2008 ஆம் ஆண்டு முதல் சீசனில் மட்டுமே கோப்பையை வென்ற ராஜஸ்தான் அணிக்கு, மகளிர் பிரீமியர் லீக் தொடரிலும் எந்த அணியும் இல்லை.

தென்னாப்பிரிக்கா மற்றும் கரீபியன் லீக் தொடர்களில் மட்டுமே துணை அணிகளைக் கொண்டுள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ். பெங்களூரு அணியில் விராட் கோலி இருப்பது போல் ராஜஸ்தான் அணியில் வணிக ரீதியிலான பெரிய நட்சத்திர முகங்கள் இல்லாததும் அணியின் சந்தை மதிப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் முதல் சஞ்சு சாம்சன் அந்த அணியில் இருந்து விலகி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.
