கோயம்புத்தூர்: இந்திய அணிக்காக ஆடி உள்ள வேகப் பந்துவீச்சாளர் ஜெயதேவ் உனட்கட் கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி கிரிக்கெட் மைதானத்தை புகழ்ந்து தள்ளி இருக்கிறார். சமீபத்தில் இந்த மைதானத்தில் நடந்த ரஞ்சி ட்ராபி போட்டியில் 12 மணி நேரத்தில் மைதானத்தில் குளம் போல தேங்கி இருந்த மழைநீர் அகற்றப்பட்டது.
அதை சுட்டிக்காட்டி அவர் மைதான ஊழியர்கள், தமிழ்நாடு கிரிக்கெட் அமைப்பு மற்றும் தமிழ்நாட்டில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகளை பாராட்டி இருக்கிறார். மேலும், தமிழ்நாடு சிறந்த கிரிக்கெட் வீரர்களை உருவாக்குவதற்கு இதுபோன்ற சிறந்த கட்டமைப்பு மற்றும் சிறந்த மைதான ஊழியர்கள் முக்கிய காரணமாக இருப்பதை குறிப்பிட்டு இருக்கிறார்.

தமிழ்நாட்டைப் பார்த்து மற்ற மாநில கிரிக்கெட் அமைப்புகள் கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் வெளிப்படையாக கூறி இருக்கிறார். 2024 - 25 ரஞ்சி ட்ராபி டெஸ்ட் தொடர் கடந்த வாரம் துவங்கியது. இதில் தமிழ்நாடு மற்றும் சௌராஷ்டிரா அணிகள் மோதிய போட்டி கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியின் மூன்றாவது நாள் மாலை மிகக் கடுமையான மழை பெய்தது. இந்த நிலையில், அந்த மைதானத்தில் குளம் போல மழைநீர் தேங்கியது. பொதுவாக இது போன்ற உள்ளூர் கிரிக்கெட் மைதானங்களில் மழைநீர் வடிகால் வசதிகள் சரியாக இருக்காது என்பதால் அடுத்த நாள் போட்டி நடக்குமா? என்ற சந்தேகம் இருந்தது.
ஆனால், நான்காம் நாள் அன்று காலை 9:30 மணிக்கு திட்டமிட்டபடி போட்டி துவங்கியது. மைதானத்தில் ஒரு இடத்தில் கூட மழைநீர் தேங்கி இருக்கவில்லை. அந்த அளவுக்கு சிறப்பாக வடிகால் வசதிகள் அமைக்கப்பட்டு இருந்ததுடன், ஊழியர்கள் எந்த இடத்திலும் மழை நீர் தேங்காமல் அகற்றப்பட்டு இருப்பதை உறுதி செய்தனர்.
இந்தப் போட்டியின் மூன்றாம் நாள் மாலை மழையால் குளம் போல இருக்கும் மைதானத்தின் புகைப்படத்தையும், நான்காம் நாள் அன்று காலை ஒரு சொட்டு மழை நீர் இல்லாமல் இருக்கும் மைதானத்தின் புகைப்படத்தையும் வெளியிட்டு இருக்கும் சௌராஷ்டிரா அணியின் கேப்டன் ஜெயதேவ் உனட்கட் ஒரு நீண்ட பாராட்டுப் பதிவை வெளியிட்டு இருக்கிறார்.
ஜெயதேவ் வெளியிட்ட பதிவு - "முதல் படத்தையும் இரண்டாவது படத்தையும் பாருங்கள். 12 மணி நேரத்தில் எல்லாம் மாறிவிட்டது. தமிழ்நாட்டில் அனைத்து தரப்பு கிரிக்கெட்டுக்குமான உள்கட்டமைப்பு வசதி சிறப்பாக உள்ளது. அதனால் தான் தமிழ்நாடு வெற்றிகரமான கிரிக்கெட் வீரர்களை இதற்கு முன்பும், இப்போதும் கொண்டுள்ளது. நாங்கள் இந்த போட்டியில் தோல்வி அடைந்தாலும் மைதான ஊழியர்கள் எந்த அளவுக்கு விரைவாக செயல்பட்டு அனைத்தையும் மாற்றினார்கள் என்பதை பார்த்தோம்."
"மூன்றாம் நாள் அன்று மாலை கடுமையான மழை பெய்தது. ஆனால், நான்காம் நாள் காலை 9:30 மணிக்கு போட்டி துல்லியமாக துவங்கியது. ஒரு வெற்றிகரமான அணிக்கு வீரர்களை தாண்டியும் சில விஷயங்கள் இருக்க வேண்டும். மற்ற மாநில கிரிக்கெட் அமைப்புகள் இதை ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்ளும் என நம்புகிறேன். தமிழ்நாடு கிரிக்கெட் அமைப்புக்கு எனது வாழ்த்துக்கள்." என குறிப்பிட்டு இருக்கிறார்.
IND vs NZ: விராட் கோலி போட்ட மொத்த பிளானும் காலி.. பெங்களூரு ராசியும் போச்சு.. மழையால் வந்த வினை
வேறு மாநிலத்தை சேர்ந்த ஒரு வீரர், அதிலும் எதிரணியின் கேப்டன் தமிழ்நாடு கிரிக்கெட் அமைப்பு மற்றும் கோவை கிரிக்கெட் மைதான கட்டமைப்பு மற்றும் அதன் ஊழியர்களை புகழ்ந்து இருப்பது தமிழக கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இந்தப் போட்டியில் தமிழ்நாடு அணி சௌராஷ்டிராவை ஒரு இன்னிங்ஸ் மட்டும் 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது