மும்பை : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இளம் வீரர்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளித்துவிட்டு முற்றிலும் இளம் வீரர்களை அணியில் தேர்வு செய்யும் திட்டத்தை தேர்வு குழு கையில் எடுத்திருந்தது.
இந்த நிலையில் ரோகித் சர்மா விராட் கோலி போன்ற வீரர்களுக்கு கடைசி ஒரு முறையாக டி20 உலக கோப்பையில் வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற முடிவில் தேர்வுக்குழு இருக்கிறது. இந்த நிலையில் இந்திய அணியில் பந்து வீசத் தெரிந்த பேட்ஸ்மேன் மிகவும் குறைவு.

இது இந்தியாவுக்கு பல முக்கிய போட்டிகளில் பெரும் பின்னடைவை ஏற்படுத்துகிறது. இன்னும் நாம் ஜடேஜாவை மட்டுமே நம்பி இருக்கும் சூழல் ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் பந்து வீச தெரிந்த பேட்ஸ்மேன் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடியும் ரியான் பராக் என்ற 22 வயது வீரரை இந்திய அணியில் தேர்வு குழுவினர் சேர்க்கவில்லை.
இதற்கு அவருடைய திமிர் தனம் தான் காரணம் என்று கூறப்படுகிறது. நடந்து முடிந்த சையது முஸ்தாக் அலி தொடரில் தொடர்ந்து ஆறு அரை சதம் அடித்து ரியான் பராக் உலக சாதனை படைத்திருந்தார். இதுவரை 98 டி20 போட்டிகளில் விளையாடி பேட்டிங்கில் 2043 ரன்களும், பந்துவீச்சில் 41 விக்கெட்டுகளையும் ரியான் பராக் எடுத்திருக்கிறார்.
சரி ரியான் பராக் டி20, ஒருநாள் போட்டிகளில் மட்டும் தான் அப்படி விளையாடுகிறார் என்று பார்த்தால் ரஞ்சி கிரிக்கெட்டிலும் பட்டையை கிளப்புகிறார். நேற்று சத்தீஸ்கர் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் அசாம் அணியின் கேப்டனாக களம் இறங்கிய ரியான் பராக் ஃபாலோவ் ஆன் பெற்று இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடினார்.அப்போது சத்தீஸ்கர் பந்துவீச்சை மைதானத்தில் நான்கு பக்கமும் அடித்து நொறுக்கினார்.
ஏழு பவுண்டரிகளை விளாசிய ரியான் பராக் 40 பந்துகளில் 82 ரன்கள் அடித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இந்த நிலையில் ரியான் பராக் இன்னும் 7 பந்துகளில் 18 ரன்கள் அடித்தால் ரஞ்சி கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக சதம் அடித்த ரிஷப் பந்த்தின் சாதனையை முறியடித்து விட வாய்ப்பு இருந்தது. எனினும் அவர் 56 பந்துகளில் சதத்தை பதிவு செய்தார். இவ்வளவு சிறப்பாக ரியான் பராக் விளையாடியும் அவரை அணியில் தேர்வு செய்வதற்கு பரிசீலினை கூட செய்யப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.