டெல்லி : 19 வயது உட்பட்டவர்களுக்கான ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கடந்த முறை சாம்பியன் பட்டத்தை வென்றது. இதற்கு முக்கிய காரணமாக கேப்டன் யாஷ் தூல் இருந்தார்.
இவரும் டெல்லியை சேர்ந்த வீரர் என்பதால் 2008 ஆம் ஆண்டு u19 உலக கோப்பையை வென்ற கேப்டன் விராட் கோலி போல் இவரும் பெரிய ஆளாக வருவார் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கருதினர்.

இதனால் இளம் வீரர் என்று கூட பார்க்காமல் கேப்டன் பதவியை கடந்த ஆண்டு வழங்கி அழகு பார்த்தார்கள். அவரும் கேப்டனாக களம் இறங்கிய முதல் போட்டியிலே ரஞ்சி கிரிக்கெட்டில் சதம் அடித்தார். 17 போட்டிகளில் விளையாடி 1185 ரன்கள் யாஷ் தூல் அடித்தார். எனினும் கடந்த ரஞ்சி சீசனில் யாஷ் தூல் பெரிய அளவில் சாதிக்கவில்லை. சராசரி 27 என்ற அளவில் சரிந்தது.
இந்த நிலையில் நடப்பாண்டு புதிய சீசனில் டெல்லி அணியின் கேப்டனாக யாஷ் தூல் இருந்தார். ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் முதல் லீக் ஆட்டத்தில் பாண்டிச்சேரி அணியிடம் டெல்லி அதிர்ச்சி தோல்வியை தழுவியது. இதனால் கடுப்பான டெல்லி கிரிக்கெட் சங்கம் யாஷ் தூலை கேப்டன் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கியது.
இந்த ஆட்டத்தில் யாஷ் தூல் வெறும் 2 மற்றும் 23 ரன்கள் தான் எடுத்திருந்தார். இதனை அடுத்து புதிய கேப்டனாக ஹிம்மத் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். U19 உலக கோப்பையை வென்ற வீரர்கள் எல்லாம் உடனடியாக சூப்பர் ஸ்டார் ஆக மாறுவதில்லை. விராட் கோலியே உடனடியாக இந்திய அணியில் அறிமுகமானாலும் அவர்களுக்கு நிரந்தர இடம் கிடைக்க ஒரு ஆண்டுக்கு மேல் தேவைப்பட்டது.
ஆனால் அதன் பிறகு அவர் தன்னுடைய திறமையை நிரூபித்து கடும் உழைப்பால் சூப்பர் ஸ்டாராக மாறினார். இந்த நிலையில் தான் யாரெல்லாம் U19 உலகக் கோப்பை வெல்கிறார்களோ, அவர்களுக்கு கேப்டன் பதவியை கொடுத்து அவர்களுடைய ஒட்டுமொத்த பேட்டிங்கையும் சீர்குலைத்து விடுகிறார்கள்.இப்படித்தான் பிரித்விஷா தன்னுடைய பார்மையும் நம்பிக்கையும் இழந்து நிற்கிறார். தற்போது யாஷ் தூலும் அந்த வரிசையில் சேர்ந்து விடுவார் என்ற அச்சத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் உள்ளனர்.