கோவை: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு அணி மிகவும் மோசமான பேட்டிங் ஒன்றை வெளிப்படுத்தி இருக்கிறது. அக்டோபர் 15ஆம் தேதி ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் சுற்று போட்டிகள் தொடங்கியது. இதில் கோவையில் நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் ஜார்க்கண்ட் அணியுடன் தமிழ்நாடு அணி மோதியது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஜார்க்கண்ட் அணி 419 ரன்கள் குவித்தது. இது நடு வரிசையில் களமிறங்கிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இஷான் கிஷன் 247 பந்துகளில் 173 ரன்கள் அடித்தார். இதில் 15 பவுண்டர்களும் ஆறு சிக்ஸர்களும் அடங்கும்.

தமிழக பந்துவீச்சு தரப்பில் குர்ஜப்னீத் சிங் அதிகபட்சமாக நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். 10 ஆண்டுகளுக்கு பின் தமிழக ரஞ்சி அணிக்கு திரும்பிய சந்திரசேகர் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனை அடுத்து முதல் இன்னிங்சில் களமிறங்கிய தமிழ்நாடு அணிக்கு மோசமான தொடக்கமாக அமைந்தது.
ஜார்க்கண்ட் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து தமிழக வீரர்கள் ஆட்டம் இழந்தனர். தொடக்க வீரர் பாலசுப்பிரமணியம் சச்சின் கோல்டன் டக் ஆகி ஆட்டத்தின் முதல் பந்தலில் வெளியேறினார். இதைப்போன்று அண்மையில் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்ட தமிழ்நாடு அணியின் கேப்டன் நாராயன் ஜெகதீசன் மூன்று ரன்களில் வெளியேறினார்.
மூன்றாவது வீரராக களமிறங்கிய பிரதோஷ் ரஞ்சன்பால் ஒன்பது ரன்களிலும், சிஎஸ்கே வின் இளம் வீரர் ஆண்டிரே சித்தார்த் இரண்டு ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். தமிழ்நாடு அணியின் அனுபவ வீரரான பாபா இந்திரஜித் முதல் பந்திலே கோல்டன் டக் ஆனார்.இதன் மூலம் தமிழ்நாடு அணி 14 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
இரண்டாவது நாள் ஆட்டநேரம் முடிவில் தமிழ்நாடு அணி 18 ரன்கள் எடுத்து ஐந்து விக்கெட்டுகளை இழந்துள்ளது. களத்தில் ஷாருக்கான் மற்றும் ஆம்ப்ரீஸ் ஆகியோர் உள்ளனர். ஜார்க்கண்ட் பந்துவீச்சு தரப்பில் ஷாகில் ராஜ் இரண்டு விக்கெட்டுகளும், ஜட்டின் பாண்டே மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருந்தனர். தமிழ்நாடு அணி தற்போது ஜார்க்கண்டை விட முதல் இன்னிங்ஸில் 401 ரன்கள் பின்தங்கி இருக்கிறது.