மும்பை : ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் கால் இறுதி ஆட்டத்தில் விதர்பா அணியின் நட்சத்திர வீரர் கருண் நாயர் சதம் விளாசினார். தமிழ்நாடு, விதர்பா அணிகள் மோதிய ஆட்டம் நாக்பூரில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற விதர்பா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
விஜய் ஹசாரே கோப்பை தொடரில் 5 சதம் அடித்த கருண் நாயர், சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணியில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்திய அணியில் தற்போது இடம் இல்லை என்று கூறி அகார்கர் கருண் நாயருக்கு வாய்ப்பு தர மறுத்துவிட்டார்.

இந்த சூழலில் மனம் தளராத கருண் நாயர், மீண்டும் அபார ஆட்டத்தை ஆடியிருக்கிறார். விதர்பா அணி பேட்டிங் செய்த போது கூட தொடக்க வீரர் அதர்வா டக் அவுட் ஆகியும், ஆதித்யா டக்கரே 5 ரன்களிலும், துருவ் சோரே 26 ரன்களிலும் ஆட்டமிழக்க, ஒரு கட்டத்தில் விதர்பா அணி 44 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
சிஎஸ்கே வீரர் விஜய் சங்கர் அபாரமாக பந்து வீசி 5 ரன்கள் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த சூழலில் தடுமாறிய போது நட்சத்திர வீரர் கருண் நாயர், டேனிஷ் மால்வர் ஜோடி சேர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்திய கருண் நாயர், தமிழ்நாடு அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்தார்.
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இடம் இல்லை என்றாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் எப்படியாவது இடம் பிடித்து விட வேண்டும் என்பது போல் கருண் நாயர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். விக்கெட்டை எடுக்க முடியாமல் தமிழக வீரர்கள் தடுமாறினர். டேனிஷ் மல்வேர் 75 ரன்களிலும் யாஷ் ரத்தோட் 13 ரன்களிலும், ஆகாஷ் வட்க்கர் 24 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
எனினும் தொடர்ந்து அபாரமாக விளையாடிய கருண் நாயர், 180 பந்துகளில் சதம் விளாசினார். இதில் 14 பவுண்டரிகளும், ஒரு சிக்சரும் அடங்கும். இதன்மூலம் தமிழ்நாடு அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் எடுத்தது. பந்து வீச்சில் விஜய் சங்கர் இரண்டு விக்கெட்டுகளும் முகமது, சோனு யாதவ், அஜித் ராம், முஹமது அலி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.