சூரத்: உலக முதல்தர டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் நம்பமுடியாத சாதனையை செய்துள்ளார் மேகாலயா அணியின் வீரர் ஆகாஷ் குமார் சௌத்ரி, அருணாச்சல பிரதேசம் அணிக்கு எதிரான போட்டியில் தொடர்ச்சியாக எட்டு சிக்ஸர்களை விளாசி, முதல் தர கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிவேக அரைசதம் அடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். அதிலும் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்களை அடித்தார்.
சூரத்தின் பித்வாலா மைதானத்தில் நடைபெற்ற ரஞ்சி டிராபி பிளேட் குரூப் போட்டியில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு அரங்கேறியது. மேகாலயா அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, 8-வது வீரராகக் களமிறங்கினார் ஆகாஷ் குமார். அப்போது அணியின் ஸ்கோர் ஏற்கனவே 576 ரன்களுக்கு 6 விக்கெட் என வலுவான நிலையில் இருந்தது.

தொடக்க வீரர் அர்பித் பட்டிவாராவின் இரட்டைச் சதம் மற்றும் மிடில் ஆர்டர் வீரர்களின் சதங்களால் மேகாலயா இமாலய ஸ்கோரை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. இந்தச் சூழலில், அதிரடியாக விளையாட முழு சுதந்திரத்துடன் களமிறங்கிய ஆகாஷ் குமார், அருணாச்சல பிரதேச பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார்.
ஒரு ஓவரின் ஆறு பந்துகளையும் சிக்ஸருக்குப் பறக்கவிட்ட அவர், அடுத்த ஓவரின் முதல் இரண்டு பந்துகளையும் சிக்ஸருக்கு விரட்டி, தொடர்ச்சியாக எட்டு பந்துகளில் எட்டு சிக்ஸர்களை விளாசி அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தினார். வெறும் ஒன்பது நிமிடங்கள் மற்றும் 11 பந்துகளில் தனது அரைசதத்தை எட்டியதன் மூலம், முதல் தர கிரிக்கெட்டில் அதிவேக அரைசதம் அடித்த வீரர் என்ற புதிய உலக சாதனையை அவர் படைத்தார்.
அரைசதம் கடந்த பிறகு அவர் சந்தித்த மூன்று பந்துகளில் ரன் எடுக்காத நிலையில், மேகாலயா அணி 628 ரன்களுக்கு 6 விக்கெட் என்ற ஸ்கோரில் டிக்ளேர் செய்தது. ஆகாஷ் குமார், 14 பந்துகளில் 50 ரன்களுடன் (8 சிக்ஸர்கள், பவுண்டரிகள் இல்லை) ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்த மைல்கல்லின் மூலம், ரஞ்சி டிராபி வரலாற்றில் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை ஜாம்பவான் ரவி சாஸ்திரியுடன் அவர் பகிர்ந்துகொள்கிறார். ஆகாஷ் குமாரின் ஆதிக்கம் பேட்டிங்குடன் முடிவடையவில்லை; பந்துவீச்சிலும் புதிய பந்தை எடுத்து, அருணாச்சல பிரதேசத்தின் முதல் விக்கெட்டையும் கைப்பற்றி, அந்த நாளை தனக்கு மறக்க முடியாத நாளாக மாற்றிக்கொண்டார்.
வாஷிங்டன், வருண், அபிஷேக்.. டி20 உலகக்கோப்பைக்கு இன்னும் 10 மேட்ச் தான் இருக்கு.. இந்தியா நிலை என்ன?
இந்த சாதனையின் மூலம், 2012-ம் ஆண்டு லெஸ்டர்ஷயர் அணிக்காக வெய்ன் வைட் 12 பந்துகளில் அரைசதம் அடித்த 13 ஆண்டுகால சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. ரஞ்சி டிராபியைப் பொறுத்தவரை, 2015-ம் ஆண்டு திரிபுராவுக்கு எதிராக ஜம்மு & காஷ்மீர் வீரர் பன்தீப் சிங் 15 பந்துகளில் அடித்த அரைசதமே முந்தைய சாதனையாக இருந்தது. டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக அரைசதம் அடித்த சாதனை பாகிஸ்தானின் மிஸ்பா-உல்-ஹக் (21 பந்துகள்) வசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.