திண்டுக்கல்: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் மற்றும் இறுதி சுற்றில் திண்டுக்கல்லில் நடைபெறும் போட்டியில் நாளை தமிழகம் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. தமிழகம் அணியில் தினேஷ் கார்த்திக், அபினவ் முகுந்த், பஞ்சாப் அணியில் யுவராஜ்சிங், ஹர்பஜன்சிங் ஆகிய இந்திய அணியின் முன்னணி நட்சத்திர வீரர்கள் பங்கேற்கின்றனர்.
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் 9வது லீக் மற்றும் இறுதி சுற்றுப் போட்டிகள் நாளை டிசம்பர் 1-ந் தேதி முதல் நாடு முழுவதும் பல்வேறு மைதானங்களில் நடைபெறுகின்றன. இதில் குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள தமிழகம் மற்றும் பஞ்சாப் அணிகள் நாளை திண்டுக்கல்லில் மோதுகின்றன.

திண்டுக்கல் என்.பி.ஆர். கல்வி குழும மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது. தமிழக அணியில் தினேஷ் கார்த்திக், அபினவ் முகுந்த் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முகம்மது ஆகியோர் விளையாடுகின்றனர்.
பஞ்சாப் அணியில் இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்களான யுவராஜ்சிங், ஹர்பஜன்சிங் ஆகியோர் பங்கேற்கின்றனர். பி பிரிவில் 18 புள்ளிகளுடன் 5வது இடத்தில் தமிழக அணி உள்ளது. பஞ்சாப் அணியோ 20 புள்ளிகளுடன் 3வது இடத்தில் இருக்கிறது.
ஆகையால் நாளைய போட்டி தமிழகத்துக்கு வாழ்வா சாவா என்ற நிலையாகும். பஞ்சாப் அணியும் தமிழகத்தை வீழ்த்த வேண்டிய நிலையில் இருக்கிறது. இதனால் நாளைய போட்டி பரபரப்பாக இருக்கும்.
இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் பங்கேற்கும் இப்போட்டியை காண திண்டுக்கல் சுற்றுவட்டார கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமுடம் உள்ளனர்.