தின்சுகியா: இந்தியாவின் முதன்மை உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி டிராபியின் 63 ஆண்டு கால சாதனையை முறியடித்தது, அசாம் மற்றும் சர்வீசஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டி. வெறும் 90 ஓவர்களில் முடிவுக்கு வந்த இந்த போட்டி, ரஞ்சி டிராபி வரலாற்றில் குறைந்த பந்துகளில் முடிக்கப்பட்ட போட்டி என்ற புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.
இரட்டை ஹாட்ரிக், ரியான் பராக்கின் அபாரமான ஆல்-ரவுண்ட் ஆட்டம் எனப் பல வியத்தகு தருணங்களைக் கண்ட இந்தப் போட்டியில், சர்வீசஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அசாம் அணியை வீழ்த்தி, இந்தச் சீசனில் தனது இரண்டாவது தொடர் வெற்றியைப் பதிவு செய்தது.

தின்சுகியாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த அசாம் அணி, சர்வீசஸ் அணியின் வேகப்பந்து வீச்சில் நிலைகுலைந்தது. அர்ஜுன் ஷர்மா (5-46) மற்றும் மோஹித் ஜங்ரா (3-5) ஆகிய இருவரும் அடுத்தடுத்து ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி நம்பமுடியாத சாதனையை நிகழ்த்தினர்.
முதல் தர கிரிக்கெட் வரலாற்றில், ஒரே இன்னிங்ஸில் இரண்டு பந்துவீச்சாளர்கள் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியது இதுவே முதல் முறையாகும். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பந்துவீச்சால், அசாம் அணி தனது முதல் இன்னிங்ஸில் வெறும் 17.2 ஓவர்களில் 103 ரன்களுக்குச் சுருண்டது.
பேட்டிங்கில் சரிவைச் சந்தித்தாலும், அசாம் அணி இளம் வீரர் ரியான் பராக்கின் அபாரமான பந்துவீச்சால் மீண்டெழுந்தது. தனது கிரிக்கெட் வாழ்வின் சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்திய ரியான் பராக், 25 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளைச் சாய்த்தார். அவருக்கு உறுதுணையாக ராகுல் சிங் 4 விக்கெட்டுகளை வீழ்த்த, சர்வீசஸ் அணி 29.2 ஓவர்களில் 108 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம், அந்த அணி வெறும் 5 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றது.
இருப்பினும், இரண்டாவது இன்னிங்ஸிலும் அசாம் அணியின் பேட்டிங் படுமோசமாக இருந்தது. அந்த அணி 29.3 ஓவர்களில் வெறும் 75 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. வெறும் 71 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய சர்வீசஸ் அணி, 13.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து எளிதாக வெற்றி பெற்றது. அந்த இரண்டு விக்கெட்டுகளையும் ரியான் பராக்கே கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டி மொத்தம் 90 ஓவர்கள் (540 பந்துகள்) மட்டுமே நீடித்தது. இதன்மூலம், ரஞ்சி டிராபி வரலாற்றில் குறைந்த பந்துகளில் முடிக்கப்பட்ட போட்டி என்ற புதிய சாதனையை இந்தப் போட்டி படைத்தது. இதற்கு முன்பு, 1962 ஆம் ஆண்டு டெல்லி மற்றும் ரயில்வேஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டி 547 பந்துகளில் முடிவடைந்ததுதான் சாதனையாக இருந்தது. அந்த 63 ஆண்டு கால சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போட்டியின் முதல் நாளில் 25 விக்கெட்டுகளும், இரண்டாவது நாள் காலையில் மீதமுள்ள 7 விக்கெட்டுகளும் விழுந்தன. முதல் தர கிரிக்கெட் வரலாற்றில் மிகக் குறுகிய காலத்தில் முடிந்த போட்டி என்ற பெருமையையும் இந்தப் போட்டி பெற்றுள்ளது.