மும்பை : ரஞ்சி கோப்பை தொடரில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மூன்று ரன்களில் ஆட்டம் இழந்து ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறார். ரோகித் சர்மா கடந்த சில மாதங்களாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் கடுமையாக தடுமாறி வருகிறார்.
அண்மையில் நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா மொத்தமாகவே 91 ரன்கள் தான் அடித்து இருந்தார். இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் 5 இன்னிங்ஸ்களில் ரோகித் சர்மா 31 ரன்களை சேர்த்து இருந்தார்.

இதனால் ரோகித் சர்மா இந்திய டெஸ்ட் அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட வேண்டும் என ரசிகர்கள் வலியுறுத்தினர். இதன் காரணமாக சிட்னியில் நடைபெற்ற ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா பங்கேற்கவில்லை. இந்த நிலையில் தன்னுடைய பார்மை மீட்பதற்காக ரோஹித் சர்மா ரஞ்சி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக ஆயத்தம் ஆகி வந்தார்.
சுமார் பத்து ஆண்டுகளுக்கு பிறகு ரோகித் சர்மா இன்று ரஞ்சிப் போட்டிக்கு திரும்பினார். மும்பையில் நடைபெற்ற ஜம்மு காஷ்மீர் அணிக்கு எதிரான ரஞ்சி லீக ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது. இதனை அடுத்து தொடக்க வீரராக ரோகித் சர்மாவும் ஜெய்ஸ்வாலும் களமிறங்கினர். 10 ஆண்டுகளுக்கு பிறகு திரும்புவதால் ரோகித் சர்மா இன்று பட்டையை கிளப்புவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் ரோகித் சர்மா 19 பந்துகளை எதிர்கொண்டு வெறும் மூன்று ரன்கள் மட்டுமே சேர்த்து ஆட்டம் இழந்தார். இது அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தது. மற்றொரு தொடக்க வீரரான ஜெய்ஸ்வாலும் 8 பந்துகளை எதிர்கொண்டு நான்கு ரன்கள் மட்டுமே சேர்த்து ஆட்டம் இழந்தார்.
அதன் பிறகு களம் இறங்கிய மும்பை அணி வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறினர். கேப்டன் ரகானே 12 ரன்களிலும், ஸ்ரேயாஸ் 11 ரன்களிலும், சிவம் துபே டக்அவுட் ஆகியும் வெளியேறினர். இதனால் மும்பை அணி 47 ரன்கள் சேர்ப்பதற்குள் ஏழு விக்கெட்டுகளை இழந்து தடுமாறி இருக்கிறது. காஷ்மீர் பந்துவீச்சு தரப்பில் உமர் நசீர் நான்கு விக்கெட்டுகளையும், யுதிர் சிங் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியிருக்கின்றன.