மும்பை : பார்டர் கவாஸ்கர் தொடரில் படு மோசமாக விளையாடிய சுப்மன் கில் குறித்து அடுத்தடுத்து விமர்சனங்கள் எழுந்தது. டெஸ்ட் கிரிக்கெட்டில் வெளிநாடுகளில் தொடர்ந்து மோசமாக விளையாடுவதால் அவரை அணியை விட்டு நீக்க வேண்டும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் வலியுறுத்தி இருந்தனர்.
ஆனால் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் கில் துணை கேப்டனாக பிசிசிஐ அறிவித்தது. இந்த சூழலில் கில் ரஞ்சி போட்டியில் விளையாட முடிவெடுத்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ரஞ்சி போட்டிக்கு திரும்பிய, கில் கர்நாடகா அணிக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் வெறும் நான்கு ரன்கள் மட்டும் தான் எடுத்தார்.

இதனால் கில்லை ரசிகர்கள் பொளந்தனர். பஞ்சாப் அணி முதல் இன்னிங்ஸில் 55 ரன்களில் ஆட்டம் இழந்தது. இதனை அடுத்து களமிறங்கிய கர்நாடக அணி முதல் இன்னிங்ஸில் 475 ரன்கள் குவித்தது. இதில் சமரன் இரட்டை சதம் அடித்தார்.இந்த நிலையில் பஞ்சாப் அணி தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடுகிறது.
இதில் தொடக்க வீரராக களம் இறங்கிய கில் அபாரமாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்க போராடினார். ஆனால் மற்ற வீரர்கள் யாரும் அவருக்கு துணை நிற்கவில்லை. தனியாளாக நின்று கில், தன்னுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் 171 பந்துகளை எதிர்கொண்ட கில் 102 ரன்கள் குவித்துள்ளார். இதில் 14 பவுண்டரிகள், மூன்று சிக்சர்கள் அடங்கும்.
கில்லின் ஸ்ட்ரைக் ரேட் 60 என்ற அளவில் இருக்கிறது. பஞ்சாப் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்துள்ள நிலையில் அதில் கில் மட்டுமே தனியாளாக நின்று 102 ரன்கள் அடித்திருக்கிறார். இதனால் தன் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு கில் தற்போது தக்க பதிலடி கொடுத்திருக்கிறார். இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடர், சாம்பியன்ஸ் கோப்பை போன்ற தொடருக்கு முன்பு ரஞ்சி கோப்பைக்கு திரும்பிய நட்சத்திர வீரர்கள் தடுமாறிய நிலையில் கில் மட்டும் தற்போது சதம் அடித்திருப்பது ரசிகர்களுக்கு ஆறுதலான செய்தியாக அமைந்திருக்கிறது.