மும்பை: ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதால், இந்திய அணிக்கு டெஸ்ட் போட்டிகளில் கேப்டன் பொறுப்புக்கு சரியான நபரை தேடி வருகிறது. இந்த சூழலில் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, இந்திய அணியின் அடுத்த டெஸ்ட் கேப்டனாக இருக்கக்கூடிய வீரர்கள் குறித்து தனது கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார்.
இளம் வீரர்களான சுப்மன் கில் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோரை கேப்டன் பதவிக்கு பரிந்துரைத்தார்.எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கேப்டனை தேர்வு செய்ய வேண்டும் என்று ரவி சாஸ்த்ரி வலியுறுத்தினார். முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ராவுக்கு கேப்டன் பொறுப்பு வழங்குவதை அவர் எதிர்த்தார்.

பும்ரா, பார்டர்-கவாஸ்கர் டிராபியில் ஏற்பட்ட கடுமையான முதுகு காயத்தில் இருந்து மீண்டு வருவதாகவும், அவரது பணிச்சுமையை கவனமாக கையாள வேண்டும் என்றும் சாஸ்திரி குறிப்பிட்டார். இது குறித்து பேசிய அவர்,"எனக்கு, ஆஸ்திரேலிய தொடருக்குப் பிறகு பும்ராவே தெளிவான தேர்வாக இருந்திருப்பார். ஆனால், கேப்டனாக நியமிக்கப்பட்டு அவரை ஒரு பந்து வீச்சாளராக இழக்க விரும்பவில்லை.
பும்ரா தனது உடலை ஒரு கட்டத்துக்கு ஒரு போட்டி கவனமாக கையாள வேண்டும். அவர் தீவிரமான காயத்தில் இருந்து மீண்டு வருகிறார். ஐபிஎல் கிரிக்கெட்டில் நான்கு ஓவர்கள் வீசியவர், இப்போது 10 முதல் 15 ஓவர்கள் வீச வேண்டிய சவால் உள்ளது. கேப்டன் பொறுப்பு அவரது மனதில் அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடாது," என்று ரவி சாஸ்த்ரி தெரிவித்தார்.
முன்னாள் ஆல்ரவுண்டரான ரவி சாஸ்திரி, இந்திய அணி நீண்ட கால எதிர்காலத்திற்கு ஒரு வீரரை தயார் செய்ய வேண்டும் என்று கூறுகிறார். "கேப்டன் பதவிக்கு ஒருவரை தயார் செய்ய வேண்டும். சுப்மன் மிகவும் நம்பிக்கைக்குரியவராக தோன்றுகிறார். அவருக்கு 25 வயது, அவருக்கு வாய்ப்பு வழங்குங்கள். ரிஷப் பந்த்டும் உள்ளார். இவர்கள் இருவரும் வயது மற்றும் அவர்கள் வழங்கும் திறமை காரணமாக எனது தேர்வுகள். இவர்களுக்கு இன்னும் ஒரு தசாப்தம் உள்ளது.
அவர்களை கற்றுக்கொள்ள அனுமதியுங்கள்," என்றார்.
கில் மற்றும் பந்த் இருவரும் ஐபிஎல் அணிகளான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு கேப்டன்களாக செயல்பட்டு அனுபவம் பெற்றவர்கள். தற்போது நம்பர் 1 ஒருநாள் பேட்ஸ்மேனாக இருக்கும் கில், வெளிநாட்டு மைதானங்களில் தனது ஆட்டத்திற்காக விமர்சிக்கப்பட்டாலும், சாஸ்திரி அந்த விமர்சனங்களை மறுத்தார்.
"அவர்கள் இருவரும் ஐபிஎல் அணிகளுக்கு கேப்டன்சி செய்து அனுபவம் பெற்றவர்கள். சுப்மனின் அணுகுமுறை அமைதியாகவும், நிதானமாகவும் உள்ளது. அவருக்கு தேவையான அனைத்து தகுதிகளும் உள்ளன. வெளிநாடுகளில் ரன்கள் எடுக்கவில்லை என்று விமர்சிப்பவர்களுக்கு நான் சொல்வது, உங்கள் சொந்த ரெக்கார்டுகளை பாருங்கள். கில்லுக்கு வாய்ப்பு கொடுங்கள், அவர் ரன்கள் குவிப்பார். அவர் ஒரு தரமான வீரர்," என்று ரவி சாஸ்திரி தெரிவித்தார்.