மும்பை: இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தலைசிறந்த 5 வீரர்களை முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தேர்வு செய்துள்ளார். அந்தப் பட்டியலில் ராகுல் டிராவிட், சவுரவ் கங்குலி, அனில் கும்ப்ளே உள்ளிட்ட வீரர்கள் இல்லாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் அடைந்துள்ள வளர்ச்சிக்கு மிகமுக்கியமான பயிற்சியாளர் ரவி சாஸ்திரி. இவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி ஆஸ்திரேலியா மண்ணில் 2 முறை பார்டர் கவாஸ்கர் கோப்பையை வென்று சாதித்தது. அதேபோல் இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை சமன் செய்து அசத்தியது. அதேபோல் உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது.

இந்திய கிரிக்கெட்டைத் தொடக்கம் முதலே கவனித்து வரும் ரவி சாஸ்திரி, எந்த புதிய முயற்சிகளை மேற்கொண்டாலும் ரவி சாஸ்திரியின் ஆலோசனைகளை கேட்கும். ஐபிஎல் தொடரின் போது வெளிநாட்டு கிரிக்கெட் வாரியங்களையும், வெளிநாட்டு வீரர்களையும் சமாதானப்படுத்தி அழைத்து வந்தது ரவி சாஸ்திரி தான். இந்த நிலையில் இந்திய கிரிக்கெட்டில் டாப் 5 வீரர்களை ரவி சாஸ்திரி தேர்வு செய்துள்ளார்.
இதுதொடர்பாக மைக்கேல் வாஹன் மற்றும் அலைஸ்டர் குக் ஆகியோருடன் ரவி சாஸ்திரி பேசுகையில், நிச்சயமாக அந்த பட்டியலில் சுனில் கவாஸ்கர், கபில் தேவ், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி ஆகியோர் இருக்கிறார்கள். நான் ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் ஆதிக்கத்தையும், தாக்கத்தையும் ஏற்படுத்தியவர்களைத் தேர்வு செய்கிறேன்.
அப்படிப் பார்த்தால், பிஷன் சிங் பேடியை விடவும் தோனிக்கு இடம் கொடுப்பேன். அதேபோல் பும்ராவும் இருக்கிறார். ஆனால் பும்ரா இன்னும் இளமையாக உள்ளார். அவரிடம் அதிகமான கிரிக்கெட் இருக்கிறது. அதனால் ஓய்வு பெற்ற வீரர்களைத் தேர்வு செய்கிறேன். அதனால் சுனில் கவாஸ்கர், கபில், சச்சின், தோனி மற்றும் விராட் கோலி தான்.
இந்தப் பட்டியலில் நம்பர் 1 வீரர் யாரென்றால், கவாஸ்கரை பேட்டிங்கில் மட்டுமே தேர்வு செய்ய முடியும். கபில் தேவ் உயிரைக் கொடுத்து விளையாடக் கூடியவர்,. ஆனால் அனைத்து வகையிலும் எடுத்துப் பார்த்தால், சச்சின் டெண்டுல்கர் தான் நம்பர் 1. ஏனென்றால் சர்வதேச கிரிக்கெட்டை 24 ஆண்டுகள் விளையாடி இருக்கிறார். 100 சதங்களை அடித்திருக்கிறார்.
வாசிம் அக்ரம், வாக்கர் யூனுஸ், இம்ரான் கான், பிராட், ஆண்டர்சன், காலிஸ், பொல்லாக் என்று அத்தனை பவுலர்களையும் எதிர்கொண்டிருக்கிறார். அவரின் டெக்னிக் சாதாரணமானது அல்ல என்று தெரிவித்துள்ளார். இந்தியாவில் கிரிக்கெட் மிகப்பெரிய விளையாட்டாகவும், வணிகமாகவும் மாறியதற்கு சச்சின் டெண்டுல்கரின் எழுச்சி முக்கிய காரணமாகும்.