
சுந்தருக்கு காயம்
ஆனால் வாஷிங்டன் சுந்தருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக ஏராளமான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களை தவறவிட்டார். டி20 உலகக்கோப்பைத் தொடரின் போது ஜடேஜா காயம் காரணமாக விலகிய போது, வாஷிங்டன் சுந்தர் தான் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாததால், அக்சர் படேலுக்கு வாய்ப்பு கிடைத்தது.

அரைசதம் அடித்த சுந்தர்
இந்த நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் வாஷிங்டன் சுந்தர் தேர்வு செய்யப்பட்டார். ஆல் ரவுண்டராக 3 ஒருநாள் போட்டிகளிலும் வாய்ப்பை பெற்ற வாஷிங்டன் சுந்தர் முதல் போட்டியில் 16 பந்துகளில் 37* ரன்கள், கடைசி போட்டியில் 64 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து இந்திய அணிக்கு உதவி செய்தார். 2 போட்டிகளில் 88 ரன்கள் விளாசியதோடு, பந்துவீச்சிலும் விக்கெட் எடுக்கவில்லை என்றாலும் ரன்களை குறைவாக விட்டுக்கொடுத்து சிறப்பாக செயல்பட்டுள்ளார்.

வாஷிங்டன் சுந்தருக்கு பாராட்டு
இதனால் வாஷிங்டன் சுந்தருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. ஜடேஜாவுக்கு சரியான மாற்று வீரராக சுந்தர் இருப்பார் என்றும், உலகக்கோப்பை தொடரில் முக்கிய வீரராக இருப்பார் என்றும் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் வாஷிங்டன் சுந்தர் செயல்பாடுகளை இந்திய முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பாராட்டியுள்ளார்.

ரவி சாஸ்திரி பேட்டி
வாஷிங்டன் சுந்தர் குறித்து ரவி சாஸ்திரி கூறுகையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி கொண்டுள்ளார். பேட்டிங்கில் அவ்வளவு முதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். கடினமான சூழல்களில் டாப் ஆர்டர் வீரர்கள் சொதப்பிய போது, சிறப்பாக விளையாடி உள்ளார். சுந்தர் மிகவும் கவனமாக செயல்படுவதோடு, எதிர்கால இந்திய அணியின் முக்கிய வீரராக இருப்பார் என்று தெரிவித்துள்ளார்.

உம்ரான் மாலிக் சிறப்பு
தொடர்ந்து இந்திய அணியின் செயல்பாடுகள் குறித்து ரவி சாஸ்திரி கூறுகையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் உம்ரான் மாலிக் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. அவரின் திறமையை அனைவருக்கும் தெரியப்படுத்தி உள்ளார். அவர் பொறுமையாக இருந்தால், அவருக்கு நல்ல எதிர்காலம் உண்டு. அதேபோல் சுப்மன் கில் சிறந்த தொடக்கத்தை கொடுத்துள்ளார். இந்த தொடர் இந்திய இளைஞர்களுக்கு சிறப்பாக அமைந்துள்ளது என்று தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications